Thursday, June 23, 2016

பயணங்கள் இல்லாத வாழ்க்கை என்பது உப்பில்லாமல் சாப்பிடுவது போல தான் என்று தோன்றுகிறது... பயணம் என்றால் எந்த பயணமாகவும் இருக்கலாம்... வெறுமனே நடப்பதாகவோ, இல்லை பஸ் அல்லது டிரெய்ன் பிரயாணமோ, இல்லை மனதில் ஓட்டும் நினைவு பயணமோ ஏதோ ஒன்று..
பல முறை வேகவேகமாக ஓடும் போது படு அலுப்பாக தோன்றும் பிரயாணம் கூட அது இல்லாத போது ரொம்ப வெறுமையை தரும்...
சின்ன கிளாசில் படிக்கும் போது பொங்கி வழியும் பொங்கல் பானை போல ஒரே ஸ்கூல் பேகும் லஞ்ச் கூடைகளும் வழிந்து கொண்டு வரும் ஸ்கூல் ஆட்டோவில் மீதி இருக்கும் இடத்தில் எப்படியோ நம்மை நுழைத்து கொண்டு அரட்டை அடித்து கொண்டே சென்றது ஒரு வகை என்றால், ஹை ஸ்கூல் வந்தப்பிறகு அண்ணாமலை ரஜினி போல ஸ்டைல் ஆக சைக்கிளில் ஹேண்டில் பாரை பிடிக்காமல் ஒட்டி கொண்டு போய் கீழே விழுந்து வாரி கொண்டு வந்தது ஒரு வகை....
கல்லூரி படிக்கும் காலத்தில் பஸ் பயணம்... அதிலும் லொடுக் லொடுக் என்று சும்மா அதிருதில்ல எபக்டில் ஓடும் அரசு பஸ்களை தவிர்த்து நல்ல பளிச்சென்று சூப்பரான பாட்டுக்கள் ஒலிக்கும் ப்ரைவேட் பஸ்சை சூஸ் செய்து போனது டிவைன் ரகம்...
வேலைக்கு போகும் போது எலெக்ட்ரிக் ட்ரைன் ... சீக்கிரமே ஆபீஸ் கிளம்பினால் ஒரு நல்ல சீட்டை பிடித்து செட்டில் ஆகி ஒரு புக்கை பிரித்து கொண்டால் நேரம் போவதே தெரியாது... புக்கையும் மீறி பல சமயங்களில் சுவாரஸ்யமான பல அம்புஜம் மாமிகளின் வம்பு அரட்டைகள் நம் காதை துளைத்து அதை கவனிக்க செய்து சிரிக்கவும் சிந்திக்கவும் (!) வைத்து விடும்...
இவை எல்லாம் தினப்படி பயணங்கள்...
இதை தவிர வெளியூர் பஸ் பயணங்கள் இன்னும் பல அனுபவங்கள் (!) நிறைந்தது.... சீட் கிடைக்காமல் கம்பி இருக்கும் சீட்டை தேர்ந்து எடுத்து அந்த கம்பியை பிடித்து கொண்டே ஒவ்வொரு ஸ்டாப்புக்கு முன்னிலும் யாராவது சீட்டில் இருந்து அசைகிறார்களா என்று ஏக்கத்தோடு பஸ்ஸை ஸ்கேன் செய்து கொண்டோ, இல்லை பஸ்சின் நடு பாதையின் அருகில் சீட் கிடைத்ததால் கம்பியை பிடிக்கிறேன் பேர்வழி என்று கிட்டத்தட்ட நம் மடியிலேயே விழுபவர்களை சமாளித்து கொண்டோ, நம் தோளை தலையணையாக கருதி நன்றாக தூங்கும் அடுத்த சீட் இம்சையை இடைவிடாது தலையை பிடித்து
கல்லுரலில் மாவு அரைக்கும் போது தள்ளுவது போல மறுபக்கம் தள்ளி கொண்டேயோ, அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும் ஜன்னலோர சீட்டில் காற்று முகத்தில் அடிக்க கற்பனை குதிரையை தட்டிவிட்டு கொண்டோ என்று பல அனுபவங்கள்....
வெளியூர் ரயில் பயணங்கள் வேற டைப்..
பகல் நேர ட்ரைன் என்றால் முன்பின் தெரியாத முகங்களை எதிர்த்த சீட்டிலேயே வைத்து கொண்டு வேடிக்கை பார்த்தாக வேண்டிய கட்டாயம்... தூங்க கூட படு யோசனையாய் இருக்கும்... தூங்கும் போது நம் முகம் எப்படி இருக்குமோ என்ற பயம் தான்... இருந்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டே முடிந்த வரை எத்தனை அரைக்க முடியுமோ அத்தனை நொறுக்கு தீனியையும் அரைத்து கொண்டு, புக் படித்து கொண்டு சில மணி நேரங்கள் தினசரி பரபரப்புகளில் இருந்து விடுப்பட்டு, அரட்டை அடித்து கொண்டு வருவது ஒரு சந்தோஷம்..... இன்பாக்ட் நிறைய கணவர்கள் பொழுது போவதற்காக ஒழுங்காக மனைவிக்கு காதை கொடுப்பதே இது போல பயணங்களில் தான்....
எது எப்படியோ இந்த கத்திரியில் வெயிலுக்கு பயந்து எங்கேயும் போகாமல் வீட்டிலேயே ஒரு ரெண்டு வாரம் மண்டையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்து விட்டு காரில் ஒரு லாங் ஜெர்னி ஒட்டி கொண்டு வந்த கணவரை எண்டெர்டைன் செய்ய நான்ஸ்டாப் அரட்டை அடித்து கொண்டே வந்ததில் ஒன்று புரிந்தது.... பயணங்களை போல வேறு ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் இல்லை...

No comments:

Post a Comment