Sunday, June 19, 2016

இந்த அதிர்ஷ்டம் என்பது ஒரு முறை தான் கதவை தட்டும்னு யாரு சொன்னாங்கனு யாருக்காவது தெரியுமா ... ஏன் கேக்கறேன்னு அப்புறம் சொல்றேன்...

இன்றைக்கு காலையில் எழுந்த உடனே என்றைக்கும் இல்லாத வழக்கமாய் டெய்லி ஷீட் காலண்டரை பார்த்தேன் .... "அதிர்ஷ்டம்" என்று இருந்தது .... எனக்கு  உடனே இந்த அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும்னு கேள்விப்பட்டது ஞாபகம் வந்தது... ஓகே என்றைக்குமே காலண்டரை பார்க்காத  நானே பார்த்து இருக்கேனே சோ இதில் ஏதொ மேட்டர் இருக்கு இன்னைக்கு யாரு ஒரு தடவை கதவை தட்டறாங்கன்னு பாக்கலாம்னு முடிவு பண்ணேன் ...

காலையிலேயே  அவசர அவசரமா வேலை செஞ்சிட்டு இருக்கும்  போது யாரோ கதவை தட்டினாங்க.... ஆகா அதுக்குள்ள வந்துடுச்சேன்னு ரொம்ப வேகமா போய் திறந்தா மாசா மாசம் அபார்ட்மெண்டுக்கு  கொசு மருந்து அடிக்கிறவர்... அவருக்கு ஒரு நூறு ரூபாயை கொடுத்துட்டு கதவை சாத்தினேன்  (பின்ன அதிர்ஷடம் வரும்போது அது தட்ட கதவு மூடி இல்ல இருக்கணும் ...)

அப்புறம் ஒரு பதினோரு  மணி இருக்கும் ... திரும்பவும் யாரோ கதவை தட்ட திறந்தா "மேடம்  இது நாங்க ப்ரீயா  கொடுக்கற என்சைக்ளோபீடியா ... இதுல வந்து... " ன்னு ஆரம்பிக்கும்போதே "அம்மா எங்க வீடே ஒரு என்சைக்ளோபீடியா எனக்கு வேண்டாம்மா " என்று கதவை சாத்தினேன் ...

கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் கதவை தட்டும் சத்தம்... சரி ஒரு தடவை தட்டினா தான அதிர்ஷ்டம் ... திரும்ப திரும்ப மூக்கை உடைச்சுக்க வேண்டாம் ஒரு தடவை தானான்னு பாக்கலாம்ன்னு திறக்காமல்  வெயிட் பண்ணேன்.. கொஞ்ச நேரத்துல வேகமா தட்ட, திறந்தா கூரியர் மென் "ஏம்மா வேகாத வெயில்ல வந்த தட்டினா இவ்வளவு நேரமா கதவை திறக்க ... நல்லா படுத்து தூங்கற மூஞ்சிய பாரு " என்ற ரேஞ்சில் நல்ல வசவு...

திரும்பவும் மூன்று மணிக்கு யாரோ தட்ட திறந்தால் "மேடம் பிஸ்கட் வேணுமா"  ...
இது என்னடா என்னைக்கும் இல்லாம இன்னிக்கு இவ்வளவு கதவை தட்டறாங்க என்று யோசித்தால் அப்புறம் தான் ஞாபகம் வந்தது வாட்ச்மென் லீவ் ....

சரி இன்னும் இன்றைய தினம் முடிலையே வெயிட் பண்ணுவோம்னு நினைத்து சாயங்காலம் ஏழு மணி ஆய்டுச்சு ... ஏதோ யோசிச்சிட்டே இருக்கியேன்னு கேட்ட கணவரிடம் விஷயத்தை சொன்னா கூலா "இது கூடவா புரில...நாந்தான ஆபீஸ்ல இருந்து வந்தப்போ ஒரு தடவை தட்டினேன்... நான் தான் உனக்கு வந்த அதிர்ஷ்டம் " என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்தார்...  நான் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை ....

ராத்திரி ஒன்பது மணிக்கு யாரோ தட்ட "கிண்டல் பண்ணீங்களே இதோ பாருங்க வந்துருக்கு" என்று சொல்லி கொண்டே திறந்தால் "நீங்க வாட்டர் கேன் சொல்லி இருந்தீங்களாக்கா" என்று கேட்டு இல்லை என்ற உடன் "சாரி  அக்கா D5 தான் சொன்னாங்க தப்பா E5 ன்னு நினைச்சு தட்டிட்டேன் " என்றான் ..

ஆக மொத்தம் அதிர்ஷ்டம் கதவை தட்டியதா என்றே தெரியவில்லை...
இந்த அதிர்ஷ்டம் என்பது ஒரு முறை தான் கதவை தட்டும்னு யாரு சொன்னாங்கனு தெரிஞ்சா அவங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்கணும்...
"அதிர்ஷ்டம் தட்டறது எல்லாம் ஒகே ...ஆனா அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்"

No comments:

Post a Comment