Wednesday, June 15, 2016

எக்கச்சக்க கடன் வாங்கி நாட்டை விட்டே எஸ்கேப் ஆன விஜய் மல்யாவை விட நான் ஒன்றும் குறைந்தவள் இல்லை... அது என்னன்னா நான் கடன் வாங்கின இடம் ரொம்ப பெருசு... என்னை மாதிரியே ஊரெல்லாம் கடன் வாங்கின இடம்... அதனால என்னோட கணக்கு இன்னும் பார்வைக்கு வரலை... வந்தாலும் சி பீ ஐ எல்லாம் வராதுங்கற தைரியம் தான் எனக்கு....
முதல் கடன் நான் தமிழ்நாடு தாண்டி பம்பாய்ல டைரெக்டா நாலாவது படிக்க போனப்போ... பிரச்சனை என்னனா அங்க நான் படிக்க வேண்டி இருந்த மராத்தியும் ஹிந்தியும் ..... இந்த ரெண்டு மொழிலயும் ஆனா ஆவன்னா கூட தெரியாம நாலாவது போனா எப்படி (அந்த அனுபவத்தை பத்தி தனி கதையே எழுதலாம் அதனால இப்போ கடன்காரியானத மட்டும் சொல்றேன்)... உடனே முதல் கடன்... அந்த வருஷம் மராத்தி ஹிந்தில பாஸ் ஆனா உடனே பிள்ளையாரப்பா உனக்கு 108 சுத்து சுத்தறேன்னு ... முடிஞ்சுது சிம்பிள் கடன்... பிள்ளையாரப்பாவும், எனக்கு மராத்தி ட்யுஷன் எடுத்த கங்காபாய் டீச்சர் மூலமா கிராண்ட் பண்ணிட்டார்... பாஸ் பண்ணிட்டு அவர் கோவிலுக்கு போனப்பத்தான் தெரிஞ்சுது 108 ங்கறது எவ்வளவு பெரிய நம்பர்னு ..... அப்போதான் என்னோட ப்ரெண்ட் ஒரு ஐடியா தந்தா... அவ இப்படித்தான் ஏதோ வேண்டிகிட்டு வீட்ல ஒரு சின்ன ஸ்டூல்ல குட்டி பிள்ளையாரை வெச்சு அந்த ஸ்டூலை 108 தடவை சுத்தினாளாம்... முதல் கடனையே வட்டி இல்லாம முதலையும் முழுசா கட்டாம அவ தந்த ஐடியாவை யூஸ் பண்ணி கட்டினேன்... அதுக்கே முழி பிதுங்கிடுச்சு... ஆனாலும் நம்ம பிள்ளையார் ஆச்சே போனா போறதுன்னு விட்டுட்டார்...
அடுத்ததா டென்த் எக்ஸாம் அப்போ இன்னொரு கடன்... இந்த தடவை கடன் பெருசு... பாங்கரும் பெரியவர்.. அதான் நம்ம பிள்ளையாரோட அப்பா.... நாங்க இருந்தது திருவண்ணாமலையில்.... டென்த்ல நல்ல மார்க் வாங்கினா அந்த மலையவே சுத்தறேன்னு... மார்க் எல்லாம் நல்லாத்தான் வந்தது.... ஆனா இந்த முறை அந்த ஸ்டூல் ஐடியா எல்லாம் வொர்க் அவுட் ஆகல... (அப்படியும் விடாம திருவண்ணாமலை மலையோட ஏதாவது மினியேச்சர் கிடைக்குதான்னு பார்த்து கடை வீதி எல்லாம் சுத்தினேன்... கிடைச்சா அதை ஸ்டூல்ல வைக்கலாமே)... ஆனா அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் (பிள்ளையாரோட அப்பாவை தான் சொல்றேன்... எங்க அப்பா ஸ்ட்ரிக்ட்னு ஏற்கனவே எனக்கு தெரியுமே)... சோ எப்படியோ ஒரு ரெண்டு வருஷம் கடனை கட்டாம ஒட்டிட்டேன் ... பிளஸ் 2 எக்ஸாம்க்கு முன்னாடி பயம் வந்துருச்சு .... பழைய கடனை கட்டாம இப்போ எப்படி புது கடன் கேக்கறதுன்னு... சரி வேற பாங்குல கேட்டுக்கலாம்னு முடிவு பண்ணேன்.. வீட்டு பக்கத்துல எல்லா நாளும் தவறாம போய் சாமியவே அடியோட பேத்து எடுக்கறா மாறி விழுந்து விழுந்து கும்பிட்ட நம்ம ஆஞ்சநேயர் இருந்தார்.... சோ இந்த முறை 108 சுத்தறதுன்னு எல்லாம் ஹை வட்டி வேண்டாம்.... சிம்பிளா ஒரு அபிஷேகம் பண்றேன்னு வேண்டிக்கிட்டேன்..... ஆஞ்சநேயர் எப்பவும் போல கேட்டதை விட அள்ளி கொடுத்துட்டார்... ஆனா பாருங்க அதுக்கு அப்பறம் காலேஜ், வேலை, கல்யாணம், குழந்தை னு எல்லா ஸ்டேஜசும் தாண்டிட்டேன்.. இன்னும் அவர் கடனை அடைக்கலை... அப்பப்போ சால்ஜாப்பு சொல்லிப்பேன்... "ஆஞ்சீ என் கையால நானே ஒரு சந்தன மரத்தை நட்டு இருக்கேன்... அது வளர்ந்து அதுல இருந்து சந்தனம் எடுத்து அரைச்சு உனக்கு அபிஷேகம் பண்றேன்" ன்னு...
அப்பறம் காலேஜ் ... எங்க காம்பஸ்க்குனே ஒரு பிள்ளையார் இருப்பார்... எல்லாருக்காகவும் ஒரே டைம்ல ஒரே ஆளா எக்ஸாம் எழுதறவர்.... பைனல் இயர் காம்பஸ் செலக்ஷன் .... உடனே அதே பழைய அமௌண்ட் 108 பார் பிள்ளையார்... எக்ஸ்ட்ராவா என்னோட பிரெண்ட்ஸ்க்காக ஒரு கடன்... எனக்காக இல்லையென்ற தைரியத்தில் செகூரிட்டி தானனு ஏற்கனவே நான் கடனை திருப்பி தராம டபாய்ச்ச ஆஞ்சீ (இந்த முறை பஞ்ச முகம் வேற அவருக்கு ... எந்த திசை போனாலும் பார்த்துட்டு இருப்பார்) கிட்ட வடை மாலை போடறேன்னு கேட்டேன்... ஆனா பாருங்க அவர் ரொம்ப நல்லவர்... கேட்டதை கொடுத்துட்டார்... நான் தான் எப்பவுமே மாறாமல் ஒரே மாறி இருக்கற ஆள் ஆச்சே... இன்னும் அந்த காம்பஸ் பிள்ளையாரப்பாவும் பஞ்சமுக ஆஞ்சீயும் வெய்டிங் பார் ரீபெமென்ட் ....
அப்பறம் என் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு திருப்பதி விசிட்... அங்கே என்னவோ பெருமாளை பார்த்ததும் பக்தி பெருக்கில், எனக்கு நல்லபடியா அவர் கல்யாணம் நடத்தி தரணும்னு வேண்டிக்கறதுக்கு பதிலா, ரொம்ப பிரமாதமாய் நான் அவருக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்னு சொல்லிட்டேன்.... அவர் இப்போ வரைக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்க ஒரு வாய்ப்பு தரலை... எனக்கு ஒரு வேளை அவராத்து மாப்பிள்ளை கிட்ட வாங்கின கடனையே இன்னும் அடைக்கலைன்னு தான் அவர் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறரோ ஒரு டவுட்ல வேகமா போய் திருவண்ணாமலை கடனை மட்டும் அடைச்சிட்டேன்... பட் ஸ்டில் இவருக்கு கல்யாணம் பண்ணலை... அனேகமா என் பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணிடுவேன்னு நினைக்கறேன் (சீரியஸ் ஆகவே பெருமாளே என்னை மன்னிக்கவும் உங்களை இங்கே இழுத்ததிற்கு).....
அப்புறம் வேலையில் இருந்தப்போ ஹைதராபாத் கிட்ட ஒரு பெருமாள் இருக்கார் அவர் என்ன கேட்டாலும் கொடுப்பார்னு கேள்விப்பட்டு போனேன்... நாம தான் ஏற்கனவே எக்கச்சக்க கடன் வாங்கி இருந்தாலும் திருப்தி படாத ஆள் ஆச்சே... ஆனா இவருக்கு 108 பிரதட்சிணம் ஒன்லி திருப்பி அடைக்கணும்...நோ அதர் வே ... சரி ஒகே அந்த கடனும் பாஸ் ஆய்டுச்சு .... ரொம்ப நாள் திருப்பி அடைக்கலை .... அப்போ தான் யாரோ சொன்னாங்க இவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆச்சே... கடனை அடைக்கலேனா கொடுத்த செக் பௌன்ஸ் ஆய்டும்னு... உடனே ஓடி போய் அதை மட்டும் அடைச்சிட்டேன் (அடி உதவற மாதிரி வேற எதுவும் உதவாதுன்னு நல்ல தெரிஞ்சி இருக்கு இவர்க்கு) .....
இப்படியாக இன்னும் எக்கச்சக்கமான சின்ன, பெரிய, வளர்ந்து வளர்ந்து பெரியன்னு பல கடன்கள் பாக்கி இருக்கு... ஆனா பாருங்க இவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க.. அள்ளி கொடுக்க மட்டும் தான் தெரியும்... நாம தான் எப்போவாவது இவங்க எதாவது டாகுமென்ட் பிரச்சனைனால எதாவது சாங்க்ஷன் பண்ணலேன்னா உடனே திட்டி தீர்த்துடறோம் ..... போனது போகட்டும் யாருக்காவது தெரியுமா இந்த கடனை எல்லாம் அடைக்க எதாவது ஈ எம் ஐ ஆப்ஷன் இருக்கான்னு...

No comments:

Post a Comment