Sunday, August 22, 2021

கதை - நிதர்சனம்

“சொல்ல மறந்துட்டேனே... நம்ம சங்கரன் கூட வீட்டை வித்துடலாம்னு முடிவெடுத்து இருக்கான்”


“என்னது??” வாயில் போட்ட சாதம் முழுங்க முடியாமல் தொண்டையிலேயே சிக்க, ஒரு நிமிஷம் அம்மா சொன்னதை கேட்டு அதிர்ந்தேன்...


“ஆமாண்டா.... பத்து நாள் முன்னாடி தான் இந்த பக்கமா ஏதோ வேலையா வந்துட்டு, நம்ம வீட்டுக்கும் வந்தான்... அவன் பையன் அரவிந்த்க்கு அமெரிக்கால, Michiganல யூனிவர்சிட்டி அட்மிஷன் கிடைச்சிருக்காம்.... உன்கிட்ட கூட பேசணும்னு சொன்னான்... நான் நீ இந்த வாரம் இங்க வரன்னு சொன்னேன்... அப்போ நல்லதா போச்சு நேர்லயே பேசிக்கறேன் அப்படின்னு சொல்லிட்டு போனான்..”


“சரிம்மா... வீட்டை எதுக்கு விக்கறானாம்?”

“அதாண்டா... அவன் பையனை படிக்க அனுப்ப ஏதோ லோன் எல்லாம் கூட போட்டுருக்கானாம்.... இருந்தாலும் கஷ்டமா இருக்கு போலருக்கு... அரவிந்த்க்கு கீழ வேற ரெண்டு பொண்ணாச்சே அவனுக்கு.... அதான் சரி வீட்டை வித்துடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் அப்படினான்…”


வீட்டையா?? வெறும் வீடா அது.... காரையும், மணலும், துணி துவைக்கற கல்லும், கிணறும், வேப்பமரமும், பாட்டியோட “சாப்பிட வாடா சந்துரு...”வும், அவ கை வாசனை நிறைஞ்சு இருக்கற முருங்கைக்காய் சாம்பாரும், தாத்தாவோட லைஃபாய்யும் விபூதியும் கலந்த பனியன் மணமும், மாமாவோட “டேய்ய்ய்”யும், வாசல்ல கும்னு மணம் வீசற மல்லிகையும், உள்ளங்கை அளவு பூக்கும் சிவப்பு செம்பருத்தியும், அதை கொண்டையில் வெக்கறதுக்காகவே காத்திட்டு இருக்கும் நான் ‘விக்கி’ன்னு செல்ல பேர் வெச்ச “கேட்” விநாகயரும், அகிலாவோட கல்யாண ரிசப்ஷனுக்கு போயிட்டு வந்து சத்தமில்லாம நான் அழுத வேப்பமர கிளைகள் குடைபிடிச்ச மொட்டைமாடியும் ..... ஐயோ என்னது இதெல்லாத்தையும் விக்க போறானா.... நினைக்கும் போதே என்னவோ செய்தது…


சென்னை… இல்ல தப்பு மெட்றாஸ்… சென்னைன்னு சொல்ல என்னைக்குமே எனக்கு விருப்பம் இருந்தது இல்ல..... அம்மா வழி தாத்தா, பாட்டி, அம்மாவோட அண்ணாவான ஒரே தாய் மாமா, அத்தை, அவங்க பையன் சங்கர் அண்ணா, பொண்ணு விமலா அக்கா இருந்த மெட்ராஸ்.... மேற்கு மாம்பலத்துல மகாதேவன் ஸ்ட்ரீட்ல, அந்த காலத்துல தாத்தா பாத்து பாத்து கட்டின வீடு.... வீட்டை சுத்தி கொய்யா மரம், வேப்ப மரம், மல்லிகை, செம்பருத்தி, ரோஜான்னு செடிகள், பாட்டி வெச்ச கறிவேப்பிலை, கீழாநெல்லி, பின்னாடி கிணறு, வாசல் பக்கம் சிமெண்ட்ல திண்ணை, வீட்டுக்குள்ள ரெட் ஆக்சைட் மெழுகின தரை.....


அம்மாவோட பிறந்த வீடுங்கறதாலயோ என்னமோ, மெட்றாஸ்க்கும் எனக்குமான பந்தம், தொப்புள் கொடி உறவு மாதிரி அவ்ளோ நெருக்கமா இருந்தது... ஒவ்வொரு வருஷமும் தவறாம, எனக்கும் அம்மாவுக்கும், ஏப்ரல், மே மாதங்கள், தாத்தா பாட்டி வீட்ல தான் ….


நான் பிறந்ததுலேர்ந்து எனக்கு ஆறு வயசாகற வரைக்கும், அப்பா பாம்பேல வேலை பார்த்துட்டு இருந்தார்... பாம்பே கல்யாண் ஜங்க்ஷன்ல நாங்க ஏறும் தாதர் எக்ஸ்பிரஸ், ஒண்ணரை நாட்கள் விடாம ஓடி, பேசின் பிரிட்ஜ் ஸ்டேஷன்ல நுழையும் போதே, ஜன்னல் வழியா தெரியும் அந்த மூணு ராக்ஷச சிமெண்ட் டம்ப்ளர்களை (பேசின் பிரிட்ஜ் பவர் ஸ்டேஷனோட ராக்ஷச சிம்னிக்கள்) பார்த்த நொடிலயே, மெட்ராஸ் வந்துட்ட பரவசம், சென்ட்ரல் ஸ்டேஷனோட “டொய்ங்ங்ங்..” அறிவிப்பை கேட்ட நொடியிலே ப்ரவாகமா மாறி, துள்ளிக்கிட்டே நான் கால் பதிக்கற மெட்ராஸ்… பேசின் பிரிட்ஜ்ல இருக்கற அந்த மூணு, அந்த மூணுல ஒண்ணு பாதியா உடைஞ்சது, அப்படிங்கற வரைக்கும் நினைவில் இருக்கற சிம்னிக்கள், என்னை பொறுத்தவரை மெட்ராஸ் வந்துட்ட என் சந்தோஷத்தோட கொண்டாட்டமான துவக்கம்.... பின்னாடி அப்பாக்கு சேலத்துக்கு மாற்றல் ஆகி, லீவ்லயெல்லாம் அம்மா வந்து, என்னை மட்டும் விட்டுட்டு திரும்பி போன காலத்துல, பத்தாவது பரீட்சை எழுதிட்டு லீவ்க்கு வந்தப்போ, சங்கர் அண்ணாவை கெஞ்சி, அதை பார்க்க பேசின் பிரிட்ஜ் வரைக்கும் போயிட்டு வந்து, “இது என்னடாது புதுசா ஊர் சுத்தற பழக்கம்…. அதும் ஸ்கூல் படிக்கற வயசுலயே... அந்த ஏரியாலாம் தனியா போற அளவு சரியே கிடையாது... போலாமா மாமா அப்படின்னு என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா நீ... இல்ல இது சரிப்பட்டு வராது.... உங்கம்மாக்கிட்டயே சொல்றேன்...” அப்படின்னு மாமாக்கிட்ட மண்டகப்படி வாங்கினது வேற கதை… பின்னாடி அந்த மூணு சிம்னிக்களும் காணாம போன அன்னைக்கு யாருக்கும் தெரியாம மொட்டைமாடிக்கு போய் அழுதேன்.... “அய்யே என்னடாது வளர்ந்த பசங்க எங்கயாவது அழுவாங்களா..” அப்படின்னு சங்கர் அண்ணா கிண்டல் பண்ணுவான்...


………………………………….

………………………………….

………………………………….


“டேய் .... என்னடா... அப்படியே மலைச்சு போய் உக்காந்து இருக்க..... தட்டு காயறது பாரு... போய் கையலம்பிட்டு வா....” அம்மாவோட குரல் உலுக்க, சுதாரிச்சேன்...


“அம்மா..... நான் சங்கரன் அண்ணாக்கிட்ட பேசறேன்...”


அவளுக்கு தெரியும்... வீட்டை விக்கறதை பத்தி நான் அதிர்ச்சி அடையலைன்னா தான் அவளுக்கு ஆச்சர்யம்..


“டேய் சந்துரு… நீ வரப்போறன்னு அத்தை சொன்னாடா... எப்படி இருக்க... வாணி, ஸ்ருதி எல்லாம் சௌக்கியம் தானே… வீட்டுக்கு வாடா.... எவ்ளோ நாளாச்சு நாம ஒண்ணா சாப்பிட்டு, பேசி, சிரிச்சு.... நானே உன்கிட்ட பேசணும்னு தான் இருந்தேன்.... நம்ம அரவிந்த்க்கு Michiganல MS அட்மிஷன் கிடைச்சு இருக்கு.... நீ அட்லாண்டால தான இருக்க... உனக்கு தெரிஞ்சவங்க யாராவது Michiganல இருக்காங்களா....”


மூச்சு விடாமல் பேசிய அண்ணாவுக்கு ஒரே வரியில், “அண்ணா.... வீட்டை விக்க போறியா?”… வேற எதுக்குமே பதில் சொல்லாம இதை தான் கேட்டேன்... இதை தான் கேக்க முடிஞ்சது ...


“ஆமாடா... அவனுக்கு ஸ்பான்சர் கிடைச்சாலும் அதுக்கு மேல ஆகற செலவை சமாளிக்க வேற வழி இல்ல.... யோசிச்சேன்... அதான் இந்த முடிவு...”


“ஏண்ணா… அந்த வீடு நமக்கு எவ்ளோ பிரியமானது ..... அதை போய் எப்படி??”


“என்னடா பண்றது.... அப்பா போனப்பறமே நானே ஆபீஸ்க்கு தூரமா இருக்குன்னு, அங்க இல்லாம இங்க அம்பத்தூர் வந்துட்டேன்... அவ்ளோ பெரிய தனி வீட்ல, இதுக்கு அப்பறம்லாம் யாருடா இருக்க போறாங்க ... இப்போ பாரு அரவிந்த் யூ.எஸ்க்கு படிக்க வந்துட்டான்னா அப்பறம் இங்க எங்க வரப்போறான் .... உன்னை மாதிரியே அங்கேயே இருந்துருவான்....”


“ஐயோ திரும்பி வர முடியாததுதாண்ணா ப்ரச்சனையே...” ன்னு சொல்ல வாயெடுத்தேன்.... ஆனா சொல்லாமல் முழுங்கினேன் …


“ஒரு பிளாட் ப்ரமோட்டர் ஜாயிண்ட் வென்ச்சர் போட்டுக்கலாமான்னு ரொம்ப நாளா கேட்டுட்டே இருக்கான்... அதும் இல்லாம நாம இடத்தை கொடுத்தாலும், நமக்கும் பிளாட்க்கு முன்னாடியே அழகா ஒரு தனி வீட்டையும் அவனே கட்டி கொடுக்கறதா சொல்லி இருக்கான்... நல்லதா போச்சு... நமக்கும் புதுசாவே வீடு கிடைச்சுடும்... அதான் இந்த முடிவு...” அப்படினான்.


“அண்ணா, உனக்கு இப்போ பணம் தேவையா இருக்குங்கறதால தான விக்க முடிவு பண்ணிருக்க.... வீட்டை நானே வாங்கிக்கிட்டா எனக்கு கொடுப்பியா ... நான் வாங்கிக்கறேன்...” சட்ன்னு கேட்டுட்டேன் …


கடகடன்னு சிரிச்சிட்டு, “டேய்ய்ய் ... நீ இன்னும் அப்படியே தான் இருக்க.... சரி நாளைக்கு அத்தை, மாமாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு வர்ற.. நானும் அனுவும் லீவ்தான்.... சாப்பிடற மாதிரி வர்ற.... மத்தத எல்லாம் நேர்ல பேசிக்கலாம் சரியா...” அப்படின்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டான்...


“என்னடா ... ஏதோ யோசனைலயே இருக்க.... கொஞ்சம் நேரம் கண்ணசறலாம் இல்ல.... இந்தா காஃபியை குடிச்சிட்டு தெம்பா யோசி...” சிரிச்சிக்கிட்டே கிண்டல் அடித்த அம்மாவை, அடிபட்ட பார்வையுடன் பார்த்தேன்....


சட்ன்னு பதறிட்டா... “சந்துரு.... ஏண்டா இப்படி இருக்க.... எனக்கு உன்னோட உணர்ச்சிகள் புரியலைனா நினைக்கற.... எனக்கும் தான் கஷ்டமா இருக்கு.... என்ன பண்றது … சிலதெல்லாம் நடைமுறைல வேறடா.... அந்த வீட்டை எவ்ளோ நாள் இப்படியே வெச்சிருப்பான்.... நீயே யோசிச்சு பாரு இவ்ளோ வருஷமா நீ லீவ்க்கு வரும்போதெல்லாம் அந்த வீட்டை போய் பார்க்கணும்னாவது நினைச்சு இருக்கியா ... இப்போ அதை விக்க போறான்னு தெரிஞ்சதும் உனக்கு வலிக்குது .... இது தான் நிதர்சனம்…. இதையெல்லாம் கடந்து வர்றது தான் வாழ்க்கைடா..... நீயே திரும்பி போனப்பறம் இதை பத்தி யோசிக்க கூட நேரமில்லாம கால்ல சக்கரத்தை கட்டிட்டு ஓட போற.... வா கிளம்பு... திருவல்லிக்கேணி போயிட்டு வரலாம்...” ன்னு சொல்லட்டு போய்ட்டா…


உண்மைதான் … மாமா இறந்தப்பறம், சங்கர் அண்ணா அம்பத்தூர் போய்ட்டான்.... அதுக்கு அப்பறம் நான் லீவ்க்கு வந்தப்போ எல்லாம் வீட்டை போய் பார்க்கணும்னு தோணினது இல்லை.... நம்ம வீடு தானே எங்க போய்ட போகுதுங்கற எண்ணம் காரணமா இருக்கலாம்... அதுக்காக அதை இடிச்சு வேற கட்டணும் அப்படிங்கும்போது வலிக்காம இருக்குமா …


“அப்பா.... நாளைக்கு சங்கர் அண்ணா அவன் வீட்டுக்கு நம்ம எல்லாரையும் வர சொல்லி இருக்கான்...”


“சரிடா.... போலாம்.... நாங்களே போய் ரொம்ப நாள் ஆச்சு ... கூப்டுட்டே இருக்கான்...”


காலைல குளிச்சிட்டு டிபன் சாப்பிட்டவுடனேயே, சட்னு பேண்ட் ஷர்ட்டை மாட்டிக்கிட்டு அப்பா டாண்ணு ரெடியாய்ட்டார் ....


“அம்மா பத்து நிமிஷத்துல ரெடியாய்டுவேன்னு சொல்லிட்டா.... நீயும் ரெடி ஆக இன்னும் எவ்ளோ நேரமாகும்ன்னு சொல்லிட்டா, அதுக்கு தகுந்த மாதிரி ஓலாவோ உபெரோ புக் பண்ணிடுவேன்....” ன்னு சொன்ன அப்பாவை பார்த்து “பத்து நிமிஷத்துல நானும் ரெடியிடுவேன்ப்பா ....” ன்னு சொல்லி சிரிச்சேன்....


அனாயசமா மொபைல் ஆப்ல ஓலா புக் பண்ணிட்டு இருந்த அப்பா... ஸ்கூல் லீவ்ல வரும்போது சென்ட்ரல் ஸ்டேஷன்ல, ஸ்டேஷனை விட்டு வெளிய வரும்போது மொய்க்கும் ஆட்டோ டாக்சிக்களை ஒதுக்கி, பழைய ரூட் 11D பஸ்சுக்காக எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து, பஸ்லயே வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அதே அப்பா...


“என்னடா சிரிக்கற... எனக்கும் மொபைல்ல ஆப்லாம் யூஸ் பண்ண தெரியும்டா...”ன்னு சொன்ன அப்பாவை பார்த்து, “ஒண்ணுமில்லப்பா” ன்னு சொல்லிட்டு கிளம்பினேன்...


அடையார்ல இருந்து அம்பத்தூர் போற வழி எல்லாம் எவ்ளோ மாற்றங்கள்… ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஏதோ ஒரு புது மாற்றம்.... மத்ய கைலாஷை தாண்டி, மேம்பாலத்து கீழ ஊர்ந்து, இடது பக்கமா காந்தி மண்டபம் கண்ல பட்டதும், தன்னிச்சையா அண்ணா யூனிவர்சிட்டியை திரும்பி பார்த்தேன்... ப்ளஸ் டூ முடிச்சிட்டு என்ட்ரன்ஸ் எக்ஸாம் கோச்சிங்க்காக மெட்ராஸ் தான் வந்தேன்... சங்கர் அண்ணா தான் அண்ணா யூனிவர்சிட்டிக்கு முதல் முதலா கூட்டிட்டு போனான் ... மெயின் கேட்க்கு முன்னாடி இருந்த ரவுண்டானால, “அண்ணா யூனிவர்சிட்டி” ன்னு எழுதி இருந்த அந்த பெரிய சிவப்பு க்ரானைட் ஒட்டின கான்க்ரீட் ஸ்ட்ரக்ச்சரை பார்த்த உடனே, அங்க தான் சேர்ந்து படிக்கணும்ங்கற ஆசை அதிகமாச்சு.... ப்ளஸ் டூ ல எப்படியும் நல்ல மார்க் எடுப்பேன்னு தெரியும்.. அதனால என்ட்ரன்ஸ் எக்ஸாமையும் பிச்சி உதறிடணும்னு அதுக்காகவே ராப்பகலா படிச்ச ஞாபகமெல்லாம் வர... சட்னு மனசு ஒரு தாவு தாவி அகிலா எங்க இருக்கா? எப்படி இருப்பான்னு யோசிக்க ஆரம்பிச்சது … ச்சே இப்போ என்ன அதை பத்திலாம்... மனதில் ஓடிய கேள்விகளை உதறி வேடிக்கை பார்ப்பதை தொடர்ந்தேன்... 


சங்கர் அண்ணா அப்படியே தான் இருந்தான், பிள்ளைகளின் வாழ்க்கையை பற்றிய கனவுகளை மட்டுமே லட்சியமாக கொண்ட ஒரு நடுத்தர வர்க்க அப்பாவின் வயோதிகத்தின் ஒரு சாயலை தவிர ....


“வாடா வா..... எவ்ளோ காலமாச்சு உன்னை பார்த்து.... அப்படியே தான் இருக்க.... என்ன அங்கலாம் எல்லாரும் ரெகுலரா எக்சர்சைஸ் பண்ணுவாங்களாமே... நீயும் பண்றியோ... அப்பறம் ஸ்ருதி இப்போ ஏழாவதா, எட்டாவதா? ... இந்த வீட்ல மாடி போர்ஷன் கட்டினப்பறம், இப்போதான் முதல் தடவையா வர்றியோ... வா மாடியை காட்டறேன்.... மொட்டை மாடிக்கு போனா காத்து பிச்சிக்கிட்டு போகும்... உனக்கு தான் மொட்டை மாடினா ரொம்ப பிடிக்குமே.... நம்ம மாம்பலத்துல இருந்தப்போ எப்படி இருந்ததோ, அதே மாதிரி இந்த ஏரியா இப்போ இருக்கு பாரு காத்தோட்டமா...” விடாமல் படபடன்னு பேசிக்கிட்டே இருந்தான்...


அவன் எப்பவுமே இப்படித்தான்....


நான் ஹை ஸ்கூல் வந்தப்பறம், என்னதான் சேலத்துல ராஜு, கிருஷ்ணா, செல்வம் ன்னு எனக்கு ஒரு பெரிய பிரெண்ட்ஸ் கேங்கே இருந்தாலும், லீவ் விட்டா ஒரு பத்து நாளாவது மெட்ராஸ் வரலைனா அந்த லீவ் வேஸ்ட் தான்.... அதுக்கு ஒரு முக்கியமான காரணம் சங்கர் அண்ணான்னு சொல்லலாம்..


நான் போய் வீட்ல இறங்கினவுடனே பாட்டிக்கிட்ட சிரிச்சிக்கிட்டே சொல்லுவான் “பாட்டி.... வடாம் போடலாம்னு சொல்லிட்டே இருந்தியே.... வந்துட்டான் பாரு உன் செல்ல சமத்து பேரன்.... நீ தினம் ஒரு வெரைட்டியா, காக்காவை விரட்டறதை பத்தின கவலையே இல்லாம போடலாம்.... மொட்டை மாடி பிரியன் கவனமா பார்த்துப்பான்...”


“போடா... சொன்னாலும் சொல்லாட்டாலும் அவன் சமத்து தான்... பொறுமையா உக்காந்து இருப்பான்... லைப்ரரில இருந்து பத்து புக்ஸ் ஐ எடுத்துட்டு வந்துட்டான்னா போறும்... இடத்தைவிட்டு நகராம அப்படியே உக்காந்து இருப்பான்…” பாட்டி சொல்லிவிட்டு வடாம் மாவை கிளற தயாராயிடுவா...


கரெக்ட்தான் ... அங்க இருந்த நாட்கள்ல பாதி நேரம் நான் மொட்டைமாடிலேயே தான் குடி இருப்பேன்... மாடில வெச்சிருந்த சின்டெக்ஸ் டேங்க்கும், கைப்பிடி சுவருக்கும் நடுவுல வேப்ப மரக்கிளை குடை மாதிரி விரிஞ்சி ஒரு இடம்... ஒரு புக்கை எடுத்துக்கிட்டு போய் உக்காந்தா “சாப்பிட வாடா சந்துரு...” ன்னு பாட்டி குரலை கேக்கற வரைக்கும் உலகமே மறந்து போகும்... ராத்திரி ஐஸ்வண்டி போகும்போது அதை வாங்கிக்கிட்டு மாடில உக்காந்து வானத்தை பார்த்துக்கிட்டே சாப்பிடறதுல ஒரு அலாதி சுகம் இருந்தது .. சங்கர் அண்ணா காலேஜ் போக ஆரம்பிச்சிட்ட டைம்ல மாடில ஒரு சின்ன ரூம் கட்டினார் மாமா.... “வெயில் ஏறுதேடா .... ரூம்ல உக்காந்து தான் படியேன்...” ன்னு பாட்டி சொன்னாலும், எனக்கு அந்த டேங்க்க்கு பக்கத்துல இருந்த இடம் தான் பிடித்தமானது ....


ரங்கநாதன் ஸ்ட்ரீட்க்கு விமலா அக்கா கூட போய், அந்த தெரு முனைல இருக்கற ஜூஸ் கடைல ஜூஸை குடிச்சு, கிருஷ்ணவேணி தியேட்டர்ல எல்லாருமா போய் படம் பார்த்து, பாட்டி வீட்டு பக்கத்துல இருந்த செம்ம பிரில்லியண்ட் சாரதியை பார்த்து பிரமித்து, அவன் அறிமுகப்படுத்திய லைப்ரரில ஒரு நாளைக்கு ரெண்டு புக்ஸ் ன்னு எடுத்து அசுர வேகத்துல படிச்சு, ராத்திரி தாத்தா, மாமா, சங்கர் அண்ணா, விமலா அக்கான்னு எல்லாரோடவும் மொட்டை மாடில சாப்பிட்டு, அந்தாக்ஷரி, படம் பேரெல்லாம் dumb charades ன்னு விளையாடி, அதிகமா பேசாம, நாங்க அடிக்கற கூத்தையெல்லாம் சிரிச்சுக்கிட்டே ரசிக்கிற அத்தை கூட “முத்தான முத்தல்லவோ ..” அப்படினு இனிமையா பாடற பொழுதுகள்…ஒரு தடவை அந்தாக்ஷரில வேணும்னே “அஃக்” ல முடிச்சேன்.... “டேய்ய்ய் அஃக்ல எல்லாம் பாட்டு இல்லை....” அப்படின்னு சங்கர் அண்ணா சொல்ல, “ஏன் இல்ல.... அதான் இப்போ ஏதோ பாட்டு வருதே ‘அஃக் கடான்னு நாங்க..’ன்னு கமலஹாசன் பாடறானே அதாண்டா...” அப்படின்னு தாத்தா சொல்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சது, அப்படின்னு லீவ் ஓடறதே தெரியாது …. வருஷம் 16 படத்துல வர்ற கார்த்திக் மாதிரி என்னை பீல் பண்ண நாட்கள் எல்லாம் கூட உண்டு …. கிளம்பும் நாள் என்னவோ தொண்டையை அடைக்கும் ... இப்போல்லாம் எவ்ளோ தடவை அமெரிக்கால இருந்து வந்தாலும், அந்த அளவு தொண்டையை அடைப்பதில்லையே அப்படின்னு, இப்போ இதையெல்லாம் நினைக்கும்போது தோணுது …


நான் பத்தாவது படிக்கும் போது சங்கர் அண்ணா லயோலால டிகிரி கடைசி வருஷம்.... நான் மெட்ராஸ் வந்த லீவ் நாட்களெல்லாம் அவன் தான் வெளில ஊர் சுத்தி காமிப்பான்.... சொல்லப்போனா மெட்ராஸை அப்போ தான் அதிகமா தெரிஞ்சிக்கிட்டேன்னே சொல்லலாம்... மாம்பலத்துல பாட்டி வீட்டு அதே தெருல அண்ணாவோட க்ளோஸ் பிரெண்ட்ஸ் ஸ்ரீனி அண்ணா, பிரசன்னா அண்ணா, ரஞ்சித் அண்ணா ன்னு ஒரு கும்பலே சேர்ந்து வெளில கூட்டிட்டு போகும்…


“சந்துரு... இதுதான்டா தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்ஷங்கர் வீடு....” ன்னு சொல்லிக்கிட்டே நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட் வழியா, அங்க மரங்கள் சூழ்ந்த ரம்மியமான IFCI குவாட்டர்ஸ்ல இருந்த, அவன் காலேஜ் பிரெண்ட் ஸ்ரீராம் அண்ணா வீட்டுக்கு கூட்டிட்டு போவான்... அப்பறம் அங்க இருந்து காலேஜ் ரோட் வரைக்கும் எதுக்கோ நடந்தே வருவோம்... ஸ்ரீராம் அண்ணாவோட பெரியப்பா பையன் ஐஐடில ரிசர்ச் ஸ்டூடன்ட் ... அவங்க மூலமா ஒரு தடவை ஏதோ பிரெஞ்சு படத்துக்கு பாஸ் கிடைச்சதுன்னு, ஐஐடி காம்பஸ்க்கு உள்ள இருக்கற ஓபன் ஏர் தியேட்டர்க்கு ராத்திரி கூட்டிட்டு போனான் .... குளிர் காத்துல உக்காந்து பார்த்த அனுபவம் இன்னும் மனசுல சில்ன்னு…. “டேய்ய் வாடா.... மெரினா பீச்க்கு போலாம்.... அங்க பீச்க்கு எதிர்க்க ஒரு ஆவின் கடை இருக்கு பாரு..... ஐஸ்க்ரீம் டேஸ்ட் சும்மா அப்ப்படி இருக்கும்...” அப்படின்னு பீச்க்கு கூட்டிட்டு போவான்...


சங்கர் அண்ணாக்கூட இப்படின்னா, விமலா அக்காக்கூட வெளில போறதுன்னா அது ரங்கநாதன் தெருவும், அதை ஒட்டின மாம்பலம் மார்க்கெட்டும் தான்... என்னன்னவோ காதுக்கு, மூக்குக்கு கழுத்துக்குன்னு கலர் கலரா வாங்குவா..... ரங்கநாதன் தெரு முழுக்க கிட்டத்தட்ட எல்லா கடைகள்லயும் கலர் கலரா ஹேண்ட்பேக் தொங்க, சடார்ன்னு அங்க இருக்கற ஒரு சந்துக்குள்ள நுழைஞ்சு, அதுல இருக்கற கடைகள் வழியாவே போய், சடக்ன்னு பேஸ்மெண்ட்ல இறங்கின்னு, ஏகப்பட்ட சர்க்கஸ் பண்ணி, ஒரு பேக் கடைக்கு போய்தான் பேக் வாங்குவா.... கலர் கலரா துப்பட்டா வாங்குவா .... “எதுக்குக்கா இதுக்கெல்லாம் என்னை கூட்டிட்டு சுத்தற....” அப்படின்னு கேட்டா, “டேய்ய்.... மார்க்கெட்க்கும் போணும்டா .... காயெல்லாம் வாங்கணும்... வெயிட்டா இருக்கும்... துணைக்கு வாடா....” ன்னு சொல்லி இழுத்துட்டு போய்டுவா.... முட்டைகோஸுக்கும், சின்ன வெங்காயத்துக்கும், மாங்காய் இஞ்சிக்கும், வாசனைல போட்டி நடக்கும் மார்க்கெட்…. அதைவிட்டா “வீணை வாசிக்க நெயில்ஸ் வாங்கணும் வாடா..” அப்படின்னு சொல்லி துரைசாமி சப்வே கிட்ட இருக்கற முரளி ம்யூஸிக்கல்ஸ்க்கு கூட்டிட்டு போவா.... அங்க இருக்கற வித விதமான ம்யூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அ பராக்கு பார்க்கறதுக்காகவே கூட போவேன்.... காலேஜ் போக பஸ் ஸ்டான்ட்க்கு போகணும்னா “கூட வாடா.... பேசிக்கிட்டே போலாம்..” அப்படிம்பா... நானும் ப்ளஸ் டூ வர்ற வரைக்கும் அவக்கூட இப்படி தி.நகரை சுத்திட்டு இருந்தேன் .... இப்போ டெல்லில இருக்கா ... ரெண்டு வருஷம் முன்னாடி நான் இந்தியா வந்தப்போ, எதேச்சையா ஏதோ கல்யாணத்துக்கு அவ மெட்ராஸ் வந்துருந்தப்போ பார்த்தது ...


எப்பவும் ஆபீஸ்ன்னே இருக்கற மாமா, நான் ப்ளஸ் டூல 96 பெர்சன்டேஜ் வாங்கினதும், அந்த லீவ்ல, “வாடா உன்னை வெளில கூட்டிட்டு போறேன்...” அப்படின்னு சொல்லி, மைலாப்பூர் கோவிலுக்கும், ராமகிருஷ்ணா மட்க்கும் கூட்டிட்டு போய், மைலாப்பூர் குளத்துக்கு எதிர்க்க ஒரு துணி கடைல எனக்கு ஒரு பேண்டும் ஷர்ட்டும் வாங்கித் தந்து, “நல்ல மார்க் வாங்கி இருக்கேடா சந்துரு... இனிமேலும் நல்லா படிக்கணும்.. நல்ல நிலைமைக்கு வரணும்... அது ஒண்ணு தான்டா வாழ்க்கைல முக்கியம்.. அதை மட்டும் பண்ணிட்டேனா அதுக்கப்பறம் மத்ததெல்லாம் தானாவே நல்லா அமைஞ்சிடும்..” அப்படின்னு சொன்னது நெகிழ்ச்சி... வேலைக்கு சேர்ந்தப்பறம் அவருக்கு ஒரு சஃபாரி வாங்கிட்டு போய் கொடுத்து நமஸ்காரம் பண்ணதும் “அவ்ளோ பெரிய மனுஷன் ஆய்டியாடா நீ...” அப்படின்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாலும் அவர் கண் கலங்கி இருந்தது … எனக்கு நினைவிருக்கற வரைக்கும் அவருக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு, ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி வீட்டு வாசல்ல இருக்கற திண்ணைல படுத்துக்கிட்டே ரேடியோல பாட்டு கேக்கறது... அமெரிக்கால இருந்து அவருக்கு வாங்கிட்டு வந்த ஐபாட் அ கொடுக்க தான் அவர் இல்லாம போய்ட்டார் …


ஒன்னொன்னா ஞாபகம் வர, அம்பத்தூர்ல இப்போதைய காற்றோட்டமான சங்கர் அண்ணா வீட்டுல சாப்பிட்டுட்டே, உக்காந்து பழைய கதைகளை பேசி பேசியே மத்தியானம் மூணு மணி...


“சந்துரு.... உனக்கு நாம பீச் போன கதை ஞாபகம் இருக்கா ..” ன்னு சங்கர் அண்ணா சிரிச்சிக்கிட்டே கேட்டான்… பின்ன மறக்க முடியுமா என்ன…. ஒரு தடவை பாட்டி “டேய் சங்கரா.... என்னடாது நீங்க ரெண்டு பேர் மட்டும் பிரெண்ட்ஸோட பீச்க்கு போறீங்க.... எங்களையெல்லாம் கூட்டிட்டு போக கூடாதா...” ன்னு கேட்க, “சரி பாட்டி போலாம்....” ன்னு சொல்லிட்டு சாயங்காலம் பாட்டி, தாத்தா, அத்தை, விமலா அக்கா, நானு, சங்கர் அண்ணான்னு கும்பலா கிளம்பினோம்.... அன்னைக்கு ஒரு நாளாவது பஸ் நெரிசல்ல அவதிப்படாம ஆட்டோல போலாம்னு முடிவு பண்ணி, ஒரு ஆட்டோ பத்தாதுன்னு ரெண்டு ஆட்டோ பேசி, துணைக்காக நான் ஒரு ஆட்டோல, சங்கர் அண்ணா இன்னொரு ஆட்டோலன்னு கிளம்பினோம்.... பீச்ன்னு சொன்ன உடனே ரெண்டு ஆட்டோவும் கிளம்பி, ஒன்னு மெரினாக்கும், இன்னொன்னு சாந்தோம்க்கும் போக, இன்னொரு ஆட்டோல வந்தவங்க எங்கன்னு காத்திருந்து, டென்ஷன் ஆகி, அதுலயே ராத்திரி ஆக, தனித்தனியா வீட்டுக்கு திரும்பி, விஷயம் தெரிஞ்சு விழுந்து விழுந்து சிரிச்சோம்.. “டேய்ய் ... உனக்கு கூட பாத்தா தெரிலயாடா, நீங்க இருந்தது சாந்தோம், மெரினா இல்லைன்னு...” ன்னு சொல்லி சொல்லி கிண்டல் பண்ணான்… மொபைல் இல்லாத ஆனா வரமா இருந்த காலம் …


………………………………….

………………………………….

………………………………….


“அண்ணாஆ ... பீச்க்கு போலாமா....” சட்னு கேட்டேன்


“அய்யயோ.... இங்க இருந்து இப்போ பீச்க்கு கிளம்பினா எப்போ போய் சேர... ட்ராபிக் ஹெவியா இருக்கும்.... போய் சேர்றதுக்குள்ளயே ராத்தரி ஆய்டும்.... முன்னாடியே பிளான் பண்ணி கிளம்பணும்டா....” அப்படினான்


“இல்லண்ணா.... ஒன்னும் லேட் ஆகல.... இப்போதான் மூணரை மணி... உடனே கிளம்பினா போய்டலாம்...”


“சரி ஒண்ணு பண்ணலாம்.... எல்லாருமா கிளம்பி அடையார் போலாம்.... பீச்க்கு போணும்ங்கறவங்களாம் அங்க பெசன்ட் நகர் பீச்க்கு போங்க... ராத்திரி நம்ம வீட்லயே தங்கிட்டு நாளைக்கு திரும்பிடலாம்... நாளைக்கு ஞாயித்து கிழமை தானே...” அம்மா சொல்லவும், “இந்த ஐடியா நல்லா இருக்கே..” அப்படினான் சங்கர் அண்ணா..


“பெசன்ட் நகர் ஆஆ..” ன்னு இழுத்த என்னை பார்த்து, “இன்னுமா நீ அதையெல்லாம் ஞாபகம் வெச்சிருக்க...”ங்கற அர்த்தத்துல சிரிச்சான்...


எனக்கு அவன்கிட்ட பேசணும்.... வீட்டை அவன் விக்கறதை பத்தி பேசணும்.... அதுதான் இப்போ முக்கியம் ... அதனால இத்தனை வருஷமா வீட்டுக்கு பக்கத்துலயே இருந்தும் நான் போக விரும்பாத பெசன்ட் நகர் பீச்சுக்கே போலாம்ன்னு என்னையே சமாதான படுத்திக்கிட்டேன் ..


“நான் வரலை... இன்னைக்கு இங்க காலனில க்ரூப்பா சஹஸ்ரநாமம் சொல்றோம்... நானும் ஒரு ஆர்கனைஸர் .... நீங்க வேணா போயிட்டு வாங்க....”ன்னு அனு மன்னி சொல்ல, கடைசில சங்கர் அண்ணா மட்டும் எங்க கூட வந்தான்...


அப்பா, அம்மா வீட்லயே இருந்துக்கறோம்னு சொல்ல, அவங்களை வீட்ல விட்டுட்டு நானும் அவனும் மட்டும் நடந்தே பெசன்ட் நகர் பீச்க்கு போய் மணல்ல உக்காந்தோம்... பீச் காத்து விடாம அகிலாவையே ஞாபகப்படுத்த, வீட்டை பத்தின பேச்சை ஆரம்பிக்க முடியாம இதென்ன மனசுல இந்த சஞ்சலம்ன்னு அலைகளையே பாத்துட்டு இருந்த என்கிட்ட, “என்னடா... இப்போ வரைக்கும் இந்த பீச்க்கு நீ வர்றதே இல்லையா... சரியான செண்டிமெண்ட் fool டா நீ.... நீயெல்லாம் எப்படி விதேசத்துல காலத்தை ஓட்டறியோ...” அப்படினான்


“அப்டி இல்லண்ணா ... என்னவோ இந்த பீச்னாலே அகிலா ஞாபகம் வருது.... அதான்...”


“அது சரி... டேய்ய்ய் ஏதோ கொஞ்ச நாள் ஒண்ணா என்ட்ரன்ஸ் கோச்சிங் போனீங்க... மாம்பலத்துல அடுத்த தெருலயே அப்படி ஒரு பொண்ணு இருக்காங்கற விஷயமே உனக்கு அப்போதான் தெரியும்... ஏதோ அந்த கோச்சிங் போன ரெண்டு மாசத்துல பிரெண்ட்ஸ் ஆனீங்க.... அப்பறம் அவ பாட்டுக்கு அண்ணா யூனிவர்சிட்டில சேர்ந்துட்டா.... நீ திருச்சில படிக்க போயிட்ட... இதுல எப்படிடா இவ்ளோ வருஷங்கள் கழிச்சும், அவளை நினைக்கற அளவு உனக்கு பீலிங்ஸ் ...”


உண்மை தான்.... மெட்ராஸ்ல கோச்சிங் போன அந்த ரெண்டு மாசத்துல தான் அவ எனக்கு பழக்கமானா.... அப்பறம் தான் தெரிஞ்சுது அவ வீடும் மாம்பலம் தான்னு.... கோச்சிங் முடிஞ்ச கடைசி நாள், அந்த பாட்ச்ல இருந்த எல்லாரும் ஒண்ணா பெசன்ட் நகர் பீச்க்கு தான் வந்தோம்.. எனக்கு அதுதான் முதல் தடவை பெசன்ட் நகர் பீச்... பக்கத்துல இருந்த ‘ஷேக்ஸ் அண்ட் கிரீம்ஸ்’ல சாப்பிட்டோம்...


“சந்துரு, நீ நல்லா எக்ஸாம் எழுதுவன்னு எனக்கு தெரியும்.... ரெண்டு பேருமே அண்ணா யூனிவர்சிட்டில ஒண்ணா சேர்ந்து படிக்கணும்னு எனக்கு ஆசை...” அப்படின்னு அவ சொன்னப்போ எனக்கு எதுவும் தோணலை... அண்ணா யூனிவர்சிட்டில சேர்றதுக்கு போதுமான அளவு மார்க் இருந்தும், திருச்சி REC ல சீட் கிடைச்சதும் அப்பா “நீ அங்கேயே சேந்துக்கோ..” ன்னு சொன்னப்பவும் எனக்கு அது ஒரு பெரிய விஷயமா தோணலை.... மெட்ராஸ்ல படிக்க முடியலைன்னு ஒரு பக்கம் வருத்தமா இருந்தாலும், அப்பா நல்லதுக்கு தான் சொல்வார் அப்படின்னு அங்கேயே சேர்ந்துட்டேன்.... அகிலா வீட்டுக்கு போய் அதை சொன்னப்போ, அவ கொஞ்சம் ஏமாற்றம் அடைஞ்ச மாதிரி தோணினாலும் அப்பவும் எனக்கு ஒன்னும் தோணலை... “சரி உன் அட்ரஸ் கொடு... நான் அப்பப்போ உனக்கு லெட்டர் போடறேன்.. பதில் போடுவ இல்ல..” அப்படின்னு கேட்டு வாங்கிக்கிட்டா... அப்பறம் ஒரு ஒரு வருஷம் சேலம் வீட்டு அட்ரஸ்க்கு லெட்டர் போட்டுட்டும் இருந்தா.... “எப்படி இருக்க... நான் இங்க அண்ணா யூனிவர்சிட்டில கம்ப்யூட்டர் சைன்ஸ் எடுத்திருக்கேன்... சப்ஜெக்ட்ஸ்லாம் கொஞ்சம் tough ஆ இருக்கு ஆனாலும் இன்டெரெஸ்ட்டிங் ஆ இருக்கு.. உனக்கு எப்படி இருக்கு... லீவ்க்கு மெட்ராஸ் வருவியா..” மாதிரி லெட்டர்ஸ் ... நான் ஸ்டடி ஹாலிடேஸ், செமஸ்டர் ஹாலிடேஸ் அப்படின்னு போகும்போது அம்மா அந்த லெட்டர்ஸை எல்லாம் பத்திரமா வெச்சிருந்து கொடுப்பா... நானும் பதில் எழுதி போடுவேன்...


ஒரு ரெண்டு வருஷம் மெட்ராஸ்க்கு லீவ்க்கு வர முடியாம ஹாலிடேஸ்ல இன்டெர்ன்ஷிப்லாம் பண்ணேன்... நானா எதுவும் லெட்டர்ஸ் போடாததாலயா என்னன்னு தெரில, அவ கிட்ட இருந்து லெட்டர்ஸ் வரதும் குறைஞ்சுடுச்சு... அப்பறம் பைனல் இயர் எக்ஸாம் முடிஞ்சி மெட்ராஸ் போனப்போ எதேச்சையா அவளை ரங்கநாதன் ஸ்ட்ரீட்ல பார்த்தேன்....


“ஹேய்ய் சந்துரு.... எப்படி இருக்க... ரொம்ப நாளா லெட்டர் ஒன்னும் போடறதே இல்லையே ... நான் அனுப்பின லெட்டர்ஸ்க்கும் பதிலே இல்லை...” ன்னு அவ சொன்னப்போ தான், அத்தனை நாள் அவகிட்ட இருந்து எந்த லெட்டரும் வராததுக்கான காரணம் உறைச்சுது.... நடுவுல சேலத்துல வீட்டை மாத்தினதும், நான் புது வீட்டு அட்ரஸையோ, என்னோட திருச்சி அட்ரஸையோ, அவளுக்கு கொடுக்கவே இல்லைன்னு…


“என்னை மறந்துட்ட இல்ல....”ன்னு, என் கண்ணையே பார்த்து அவ கேட்ட அந்த ஒரு வரி அத்தனை வருஷமா இல்லாம அன்னைக்கு என்னவோ மனசை ஏதோ பண்ணிச்சு.... “ஸாரி... வீட்டை மாத்திட்டோம்.... உனக்கு சொல்ல மறந்துட்டேன்....” அப்படினேன்... ஒரு மாதிரி அடிப்பட்ட பார்வை பார்த்தா...

“அப்பறம்ம்ம்ம்... எனக்கு காம்பஸ் செலக்ஷன்ல வேலை கிடைச்சிடுச்சு.... ஜூலைல ஹைதராபாத் போறேன்...” அப்படின்னா... நானும் பெங்களூர் போறதை சொன்னேன்...


அப்பறம் வேலைக்கு சேர்ந்து அடுத்த ஆறு மாசத்துல மெட்ராஸ் வந்தப்போ தான் சங்கர் அண்ணா சொன்னான்.... “டேய் உன் பிரெண்ட் அகிலாவை பார்த்தேன்.... அவளுக்கு அடுத்த மாசம் கல்யாணம்டா... மாப்பிள்ளை யாரு தெரியுமா... என் பிரெண்ட் ஸ்ரீராம் ஞாபகம் இருக்கா... அவனோட பெரியப்பா பையன்.... நாம கூட ஐஐடில படம் எல்லாம் பாத்தோமே.... அவனோட நிச்சயதார்த்தத்துல தான் அகிலாவை பார்த்தேன்... அவதான்டா பொண்ணு... வயசு வித்யாசம் கொஞ்சம் கூடனாலும் ரெண்டு பேருக்கும் நல்ல பொருத்தம்டா... என்னை பார்த்ததும் அவளுக்கும் ஒரே ஆச்சர்யம்.... உன்னை பத்தி கேட்டா... கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணுவேன் கண்டிப்பா வரணும்னு உன்கிட்ட சொல்ல சொன்னாடா..”


அவன் அதை சொன்னவுடனே என்னவோ ஒண்ணு உள்ள உடைஞ்சது.... அவளை பார்த்து பேசணும்னு தோண, அவ வீட்டுக்கு போனேன்.... “எங்கயாவது வெளில போலாமா..” ன்னு கேட்ட என்னை ஆச்சர்யமா பார்த்தா...


சிவா விஷ்ணு கோவிலுக்கு போய் பிரகாரத்துல உக்காந்தோம்... “உனக்கு நிச்சயதார்த்தம் ஆய்டுச்சுன்னு சங்கர் அண்ணா சொன்னான்.... கங்க்ராட்ஸ்..” அப்படினேன்


ஒரு நிமிஷம் அமைதியா தரையை பார்த்துட்டு இருந்தவ “கேக்க வேண்டாம்னு தான் நினைச்சேன்... கேக்காம இருக்க முடில.... கடைசி வரைக்கும் உனக்கு புரியவே இல்லை இல்ல?.... ப்ச்ச்... சரி விடு இப்போ பேசி எதுவும் ஆகப்போறதில்லை... அடுத்த மாசம் கல்யாணம்... கட்டாயம் வரணும்...” ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டா... அவ கல்யாண ரிசெப்ஷன் போயிட்டு திரும்பி வந்து, நேரா மொட்டை மாடிக்கு போய் என்னோட இடமான சின்டெக்ஸ் தொட்டிக்கு பின்னாடி உக்காந்து சத்தமில்லாம அழுதேன்... எதேச்சையா வந்த சங்கர் அண்ணாக்கு ஒரு மாதிரி விஷயம் புரிய “என்ன பண்றது... சிலதெல்லாம் எப்ப தோணனுமோ தோணாம, எப்போ சொல்லணுமோ சொல்லாம , இப்போ அழுது என்ன... விடு அவங்க அவங்களுக்கு என்ன எழுதி இருக்கோ அதான் நடக்கும் கிடைக்கும்..” அப்படின்னு சமாதான படுத்தினான்..


………………………………….

………………………………….

………………………………….


“டேய்ய்ய்.... என்ன இப்படி யோசனை பண்ணிட்டே இருக்க...” சங்கர் அண்ணா குரல் உலுக்க, நடப்புக்கு வந்தேன்.. சரி இப்போ இதையெல்லாம் விட முக்கியமா வீட்டை பத்தி பேசணும்...


“அண்ணா.... நான் நேத்து விளையாட்டுக்கு சொல்லலை... சீரியஸா தான் சொன்னேன்… வீட்டை நானே வாங்கிக்கறேன்.... உனக்கு எவ்ளோ வேணும் சொல்லு...”


“உனக்கு என்னடா பைத்தியமா பிடிச்சிருக்கு... டேய்ய் உன்னை விட அந்த வீட்லயே வளர்ந்த எனக்கு அந்த வீட்டு மேல எவ்ளோ அட்டாச்மென்ட் இருக்கணும்... என்ன பண்றது... சிலதெல்லாம் ப்ராக்டிகலா யோசிக்கணும்... உள்ளூர்ல இருக்கற நானே அந்த வீட்ல இல்லை.... நீ அதை வாங்கி என்ன பண்ண போற... பூட்டி வெச்சிருப்பியா... அது சரி இந்த விஷயத்தை வாணிக்கிட்ட சொன்னியா... அவ கருத்தை கேட்டியா ... சும்மா எப்பவும் போல எமோஷனலா யோசிச்சு பைத்தியக்காரத்தனம் பண்ணாத.... நான் அதை வித்தாலும், அங்கேயே ஒரு புது வீடு கிடைக்கும்.... வேற என்ன வேணும்.... அந்த இடத்துல நமக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா... சும்மா ஏதோ யோசிச்சு மண்டைய குழப்பிக்காத.... உன்னோட வெகேஷனை என்ஜாய் பண்ணு...”


“எப்படிஇஇ??? சின்ன வயசுல அங்க மாம்பலத்துல என்ஜாய் பண்ண மாதிரியா??” ன்னு கேட்ட என்னை முறைத்தான்...


“அண்ணா..... எனக்கு அந்த வீடு வேணும்.... உனக்கு அந்த ப்ரமோட்டர் எவ்ளோ தர்றதா சொல்லி இருக்கானோ அதை நான் உனக்கு தரேன்... ப்ளீஸ் .... நான் நாளைக்கு அங்க போய் வீட்டை பார்க்க போறேன்...” அப்படினேன்


ஒரு நிமிஷம் என்னையே பார்த்தவன் என்ன நினைத்தானோ... “சரி நீ பாரு... இப்போ இதை பத்தி இதுக்கு மேல எதுவும் பேசவேண்டாம்… நல்லா யோசிச்சு அப்பறம் பேசுவோம்... இப்போ வா வீட்டுக்கு கிளம்புவோம்..” அப்படின்னு எழுந்து நடக்க ஆரம்பிச்சான்..


காலைல எழுந்து, குளிச்சு சாப்பிட்ட உடனே கிளம்பினேன்... அந்த நேரத்திலேயே திநகர்ல ஒரே ட்ராபிக், வண்டிகள்... எல்லாரும் என்னன்னவோ வாங்கிக்கிட்டே இருந்தாங்க... கேப் ட்ரைவர் என்னன்னவோ ஒன் வே டூ வே ன்னு சொல்லி, திநகர்க்கே உரிய கூட்ட நெரிசலான ரோட்கள்ல, திறமையா வண்டிய ஓட்டிட்டு போனான்... அயோத்யா மண்டபத்தை பார்த்தவுடனே மனசுக்குள்ள ஒரு பரபரப்பு தொத்திச்சு.... வீடு இருந்த தெருவில் நுழைஞ்சது கூட புரியாம நிறைய மாற்றங்கள்....


“எந்த இடம் சார்?” கேட்ட டிரைவரிடம் “கொஞ்சம் இங்கயே நிறுத்திக்கப்பா..... நான் இறங்கி நடந்து போய்க்கறேன்..”ன்னு சொல்லி இறங்கிக்கிட்டேன்..


நடந்துக்கிட்டே ரெண்டு பக்கமும் வேடிக்கை பார்த்தேன்... புதுசா கொஞ்சம், பழையதை புதுப்பித்து பெயிண்ட் மின்னிய கொஞ்சம், XXX சொல்யூஷன்ஸ் , YYY பவர் டெக் சிஸ்டம்ஸ் அப்படின்னு சில சின்ன நிறுவனங்கள் கொஞ்சம்ன்னு, கட்டிடங்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள்....


பார்த்துக்கிட்டே நடக்க நடக்க, சடக்ன்னு பிரேக் போட்டு நிறுத்தியது வீடு ...


வீடுன்னா சொன்னேன்... ஒரு நொடி இதயத்துல குத்து பட்டவன் மாதிரி உணர்ந்தேன்....


வாசலில் பாட்டி போட்ட நெளி கோலம் இல்லை.... வராந்தாவில் மாமாவின் மொபெட் இல்லை.... திண்ணைக்கு பக்கத்தில் போடப்பட்டிருக்கும் தாத்தாவின் ஈஸி சேர் இல்லை.... திண்ணைல மாமா படுத்துக்கிட்டே கேக்கும் பாட்டு இல்லை…. வாசல் கதவில் இருந்து பார்த்தாலே புழக்கடை வரைக்கும் தெரியும் அமைப்பில், உள்ளே அடுக்களையில் பாட்டி ரசத்துக்கு தாளிக்கும் நெய் மணம் இல்லை... அவள் வைத்த கறிவேப்பிலை, எனக்கு காமாலை வந்தப்போ அவள் கொடுத்த, அவள் வைத்திருந்த கீழாநெல்லி, இல்லை.... வெளியில் சைடில் கொடிகள் கட்டப்பட்டு, காய வைக்கப்பட்டிருக்கும் வேஷ்டியும், பனியனும், சுங்குடி புடவையும், பேண்டும் சட்டையும் என்னோட அரை ட்ராயரும் எதுவுமே இல்லை... படு எளிதான குறுக்குவாட்டு கம்பிகள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும் பிரவுன் நிற ஜன்னல்களும், காம்பவுண்டில் இருந்து எக்கி நிற்கும் நந்தியாவட்டை பூக்களும், தரையில் கிடைக்கும் அதன் இறந்த காலமும், செம்பருத்தியும், ரோஜாவும் எதுவும் இல்லை ...


மற்ற கட்டிடங்கள், அபார்ட்மெண்ட்களுக்கு நடுவில், உயரமான ரோடில் இருந்து சடக்ன்னு ரெண்டடி கிழே இறங்கி… முன்ன கோபி மஞ்சள் நிறத்தில் இருந்தது என்றே சொல்ல முடியாத, என்ன கலரில் இருந்தது என்றே அனுமானிக்க முடியாத கருமை படிந்த, மேல் பூச்சை இழந்த காம்பவுண்ட் சுவரும்… அடிக்கப்பட்ட பச்சைநிறம் சாயம் போய், கீழே தரையிலிருந்து பாதி உயரத்துக்கும் மேலே அந்த பெயிண்டும் உதிர்ந்து, மேல் பூச்சும் அரிக்கப்பட்டு, காரை பெயர்ந்து அங்கங்கே வெளியில் தெரிந்த இரும்பு கம்பிகளுமாய் நின்ற, வெளி வராந்தாவின் ரெண்டு கான்க்ரீட் தூண்களும்…. அதே போல் கீழே தரையிலிருந்து பாதி உயரத்திற்கும் மேலே சுத்தமாய் சேறும் சகதியும் பதிந்த அடையாளங்களுமாய், காரை உதிர்ந்து நின்ற பழுப்பான வீட்டு சுவரும்… வராந்தாவின் மேலே இருந்த jaali ஓட்டைகள் நிறைந்த சுவரில், அந்த டிசைனே தெரியாத அளவில் அங்கங்கே உடைந்தும்… ஜன்னல்களின் கதவுகள் தூக்கில் தொங்குவது போல தொங்கியும்… காம்பவுண்டின் உள்ளே வீட்டை சுற்றி புதர்களும், கொடிகளுமாய், சுற்றி இருந்த மரங்கள் எல்லாம் காய்ந்து, சாய்ந்து… மாடியின் வெளிச்சுவர் அங்கங்கே உடைந்தும்… சுத்தமாய் இடிந்திருந்த வாசல் திண்ணையுமாய்…. வெயிலிலும், மழையிலும், அபத்தமாய் வந்த வெள்ளத்திலும் சிக்கி சின்னாபின்னமாய்....


தொண்டையை அடைத்து, கண்கள் சட்னு நிரம்பி, வாழ்க்கை எங்கெங்கேயோ தேவையே இல்லாமல் நகர்ந்து, திரும்பி செல்லவே முடியாத, திரும்ப நடக்கவே வாய்ப்பில்லாத தருணங்களுமாய் அலைக்கழித்து, திரும்பி போகமுடியாத, மகா பெரிய அபத்தமாய், என்னது இது ….. மனதில் இருந்த பல பல நினைவுகளும் ஒரு நொடில பாரமாய் மாறியது…. என்னவோ எதையோ இழந்த துக்கமும், ஏக்கமும் மனதை பிசைய, மரண படுக்கையில் இருக்கும் பிரியமானவளை போல இருந்த வீட்டை, கையாலாகாத இடிந்த மனதுடன் பார்த்தேன்....


சங்கர் அண்ணாக்கு போன் பண்ணி “அண்ணாஆ... வீட்டை அந்த ப்ரமோட்டர்க்கே கொடுத்துரு....” ன்னு தொண்டை அடைக்க, குரல் உடைய சொல்லிட்டு, “டேய்ய்ய்.... என்னடா அழறியா.... எங்க இருக்க? என்ன ஆச்சு?” ன்னு கேட்ட அவனுக்கு எதையும் சொல்லாமல் காலை கட் பண்ணிட்டு, திரும்பி பார்க்காம நடக்க ஆரம்பிச்சேன்,


“வராமலேயே, இதை பார்க்காமலேயே, இருந்து இருக்கலாம்” ங்கற நிரந்தரமான வலியோட .


சில நிதர்சனங்கள் தரும் வலியை விட, நினைவுகள் தரும் சுமைகள் தாங்க கூடியதாக தான் இருக்கிறது, நினைவுகளாகவே இருக்கும் வரையில் !!!


- சாரதா



Friday, January 18, 2019

Thank you #WorditArtFund for publishing my debut novel #APasserby'sDiary via @BeShakespeare #BecomeShakespeare

Thursday, March 23, 2017

எனக்கு இதே வேலை..... என்ன வேலை?????

எனக்கு இதே வேலை..... என்ன வேலை????? ..... எங்கயாவது ஏதாவது வம்பு வளர்த்துட்டு அப்பறம் பின் விளைவுகளை பத்தி யோசிக்கறது.... வம்புன்னா ரொம்ம்ம்ப பெரிய லெவல்லாம் இல்ல..... இந்த கடைக்காரர் ஆட்டோக்காரர் அந்த மாதிரி ..... பின்ன என்னங்க பஸ் கண்டக்டர்ல இருந்து ரெஸ்டாரண்ட் வெய்ட்டர் வரைக்கும் எல்லாரையும் "சார்" "அண்ணா" "ஏம்ப்பா தம்பி" ன்னு க்ரோனலாஜிக்கல் ஆர்டர்ல மரியாதையா "தேங்க் யூ""எக்ஸ்க்யூஸ் மீ" ன்னு கர்டெசியோட பேசற என்னை ஏமாத்தற மாதிரி மட்டும் தெரிஞ்சுது அவ்ளோதான் பொங்கி எழுந்து சண்டை போட்டு வந்துருவேன்.... அந்த கெத்த அப்படியே மெயின்டெயின் பண்ணா பரவால்ல ..... ஆனா கொஞ்ச நேரத்துல "இது தேவையா .... அவங்களுக்கு தெரிஞ்சுது அவ்ளோதான்னு பேசாம பொறுமையா இருந்து இருக்கலாம்.... இப்ப எந்த ஏழரைய இழுத்து விட்டுருக்கோமோ" ன்னு விட்டத்தை பார்த்து யோசிப்பேன்.... என்னோட ஹஸ்பண்ட்க்கு வேற இந்த மாதிரி நான் பண்ணறதெல்லாம் சுத்தமா பிடிக்காது....  இப்படி ஏதாவது பண்ணிட்டு அதை பத்தி அவர்கிட்ட சொன்னா (அவர்கூட போகும்போது வாய திறப்பேன்??.... பரம சாது நான் ) அவ்ளோதான் ..... "நாம படிச்சவங்க தான .... இக்னோர் பண்ணிட்டு பேசாம வரலாம்ல.... ரோட்ல கடைலன்னு ஏன் ஸீன் கிரியேட் பண்ணனும்" ன்னு இங்கயும் திட்டு விழும் .... அவர்கிட்ட சொல்லாமலாவது இருக்கலாம்ல ... சின்சியரா சொல்லி வாங்கி கட்டிப்பேன்.... சரி சரி ஓகே ஓகே புரியுது …. முன்குறிப்பு தற்பெருமை எல்லாம் நிறுத்திக்கறேன் … விஷயத்துக்கு வரேன்.... இந்த மாதிரி ஸ்டண்ட் வேலை ஒன்னு பண்ணிட்டு அதனால வசமா மாட்டிகிட்டேன் ...  

ஒரு பன்னெண்டு பதிமூணு வருஷம் முன்னாடி இருக்கும்..... வீட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல என்னை பாத்தாலே ஒரே தி மரியாதை... எல்லாரும் உடனே மீட்டிங்க போட்டு "ஹே நேத்து நீதான்பா போன.... இன்னைக்கு என் டர்ன்னு " அப்படின்னு பஞ்சாயத் பண்ணி "உக்காருங்க மேடம்.... " அப்படின்னு ஆட்டோ கதவை திறந்து விடுவாங்க .. ச்சை ஆட்டோல ஏது கதவு... வாய்ல அதுவா வருது .... பின்ன ரெகுலரா ஏழரை மணி ஆபீஸ் பஸ்ஸை கரெக்ட்டா ஏழு நாப்பதுக்கு பஸ் ஸ்டாப்க்கு போய் அதை மிஸ் பண்ணிட்டு அங்க இருந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல இருக்கற ஆட்டோஸ்க்கு டெயிலி முதல் போணியே நாந்தான் பண்ணுவேன்.... நல்ல கை ராசின்னு பேசிக்குவாங்க ..... பின்ன காலைல நான் தர ஆட்டோ சார்ஜே அன்னைக்கு முழுசா போதுமே.... எல்லாம் ஒரு தர்மம் தான்..... அப்பறம் வீட்ல "பொறுப்பே இல்ல..... என்ன சொல்லி என்ன" ன்னு தர்ம திட்டு .... பட் அது ஒரு சோஷியல் சர்வீஸ் மாதிரி பண்ணிட்டு இருந்தேன்னு வெச்சுக்கோங்க ...

அன்னைக்கு அப்படிதான் எங்க வீட்ல இருந்து ரெண்டு தெரு தள்ளி இருந்த சித்தப்பா வீட்ல இருந்து என்னோட பாட்டியை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர போனேன்....  வயசானவங்கறதால போகும் போதே ஆட்டோல போயிட்டு அவங்கள அதே ஆட்டோல கூட்டிட்டு வர்றதா பிளான் .... ஆட்டோ ஸ்டாண்ட்ல அன்னைக்கு இருந்த ஆட்டோல பதினஞ்சு வயசு தான் இருக்கும் அந்த ஆட்டோ ட்ரைவர்க்கு.... "ஆபீஸ் தான மேடம் " னான்.... "இல்லப்பா .... --- ஸ்ட்ரீட்க்கு போய் அங்க இருந்து பாட்டியை கூட்டிட்டு இங்க திரும்ப வந்து டிராப் பண்ணனும்.... ஒரு அஞ்சு நிமிஷம் அங்க வெயிட் பண்ண வேண்டி இருக்கும்.... அதையும் இப்போவே சொல்லிர்றேன்" னேன்.... "சரிங்க" னான்.... "யூஷுவலா அந்த ஸ்ட்ரீட்க்கு போக இருபது ரூபாய் தான.... நான் நாப்பது தரேன்... அப்பறம் கூட கேக்க கூடாது " அப்படின்னு தெளிவா பேசிட்டு தான் ஆட்டோல ஏறினேன் ......

அங்க ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட்டிங்க்ல இருந்துருப்பான் .... அதையும் தெளிவா சொல்லிருந்தேனே... முணுமுணுன்னு புலம்பிகிட்டே தான் ஆட்டோவை ஓட்டிட்டு வந்தான் ... திரும்ப எங்க வீட்டுக்கு வந்தப்போ தான் பிரச்சனை.... "என்ன நாப்பது ரூபா தரீங்க.... எவ்வளவு நேரம் அங்க வெயிட்டிங்க்ல இருக்க வெச்சீங்க.... வேற சவாரியாவது போயிருப்பேன்.... அம்பது தாங்க..." ன்னு ரைட் ராயலா கேட்டானே பாக்கணும்.... சுர்ர்ர்ன்னு ஏறிடுச்சு எனக்கு ...."ஏன்பா எல்லாத்தையும் தெளிவா பேசிட்டு தான ஏறினேன்..... இப்போ என்ன தகராறு பண்ற.... உங்க ஸ்டாண்ட்ல ரெகுலரா ஆட்டோல போறேன்..... நீ என்ன இந்த சின்ன வயசுலயே இப்படி இருக்க.... " ன்னு முதல்ல கொஞ்சம் பொறுமையாதான் பேச ஆரம்பிச்சேன்.... அவன் தேவை இல்லாம மரியாதை குறைவா பேசினவுடனே ரொம்ம்ம்ப கோபம் வந்துருச்சு.... கடுப்பாகி "வேணாம்டி எதுக்கு தகராறு.... அம்பது கொடுத்துரு ..." ன்னு சமாதானமா பேசின பாட்டியை வீட்ல விட்டுட்டு நேரா ஆட்டோ ஸ்டாண்ட்க்கே போய் "என்ன உங்க ஸ்டாண்ட் பையன் இப்படிலாம் பேசறான்.... நீங்கலாம் ஒன்னும் சொல்ல மாட்டிங்களா..." அப்படி இப்படின்னு சண்டை போட்டுட்டேன்.... அவங்க அப்போதைக்கு "சரி மேடம்.... நீங்க போங்க... நாங்க சொல்லி வெக்கறோம்..... டேய் அவங்க சொல்லிட்டு தான வண்டிய எடுத்தாங்க.... அப்பறம் என்ன தகராறு பண்ற..." அப்படின்னு அவன்கிட்ட பேசற மாதிரி என்னை அனுப்பிட்டாங்க.... அடுத்த ரெண்டு மூணு நாள் ஆட்டோலேயே போகல.... அதுக்கு அடுத்த வாரம் வேற வழி இல்லாம ஒரு நாள் அந்த ஸ்டாண்ட்ல வேற ஒரு ஆட்டோல ஆபீஸ் போனேன்...  ஆட்டோ சார்ஜ்க்கு கரெக்ட்டா சேஞ்சு இல்ல.. அந்த ட்ரைவர் மீதி சிக்ஸ்டி ரூபீஸ் தரணும் .... சரி மீதியை சாயங்காலம் ஸ்டாண்ட்ல கொடுத்துர்றேன் மேடம் ன்னு சொன்னவனை நம்பி விட்டுட்டேன்.... அன்னைக்கு நான் வீட்டுக்கு போக லேட் ஆயிடுச்சு.... அடுத்த நாள் பஸ் வர்ற டைம்க்கே போய்ட்டேன்.... அந்த ட்ரைவர் ரோட்ல அப்போசிட் சைட்ல நின்னுட்டு தான் பேசிட்டு இருந்தான்.... என்னை பாத்தும் பாக்காத மாதிரி திரும்பிகிட்டான்.... பஸ் வந்துட்டதுனால நானும் சரி ஈவினிங் பாத்துக்கலாம்னு போய்ட்டேன்.... அன்னைக்கும் லேட் ஆயிடுச்சு... அதுக்கு அடுத்த நாள் சீக்கிரமா கிளம்பினேன்.... அவன் என்னை பாக்காத மாதிரி இருந்தான்.... நான் ரோடை க்ராஸ் பண்ணி "நீங்க எனக்கு சிக்ஸ்டி தரணும்.... ரெண்டு நாளா பாத்தும் பாக்காத மாதிரி இருக்கீங்க...." அப்படினேன்.... "ஆமா சிக்ஸ்டி தான தரணும்..... மறந்துட்டேன்.... உனக்கு உன் காசு வேணும்னா நீ (கவனிக்கவும் மரியாதை இல்லாம) வந்து கேக்க வேண்டியது தான " ன்னு திமிரா பேசினான்.... அவன் ஆட்டோக்குள்ள ஏற்கனவே என் கூட தகராறு பண்ண அந்த பையன் உக்காந்து இருந்தான்.... சரிதான் இது பிளான் பண்ணி செய்யறதுன்னு புரிஞ்சு திரும்பவும் செம்மா கடுப்பு.... நேரா அந்த ஸ்டாண்ட்ல கொஞ்சம் சீனியர் கிட்ட போய் "எனக்கு அறுபது ரூபா பெரிய விஷயம் இல்ல (ஆமா கர்ணனுக்கு தங்கச்சி நான்னு நெனப்பு ) ஆனா ஏமாத்தணும்னு நினைச்சது தான் என்னால பொறுத்துக்க முடியலை …..இந்த மாதிரி ஒரு ரோக் கூட்டம் இந்த ஸ்டாண்ட்ல இருக்குன்னு இத்தனை நாள் நான் தெரிஞ்சுக்கலை பாருங்க ...இனிமேல் உங்க ஸ்டாண்ட் வண்டில ஏறுவேன் ...." அப்படின்னு கத்திட்டு போய்ட்டேன்....

அதுக்கு அப்பறம் அந்த ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோவே ஏறலை.... ஆனா அங்க இருந்த கொஞ்ச மாசம் அந்த ட்ரைவர்ஸ் எப்ப நான் அந்த பக்கம் போனாலும் முறைச்சுகிட்டே இருப்பாங்க… நானும் கண்ணாலேயே எரிச்சிட்டு போய்டுவேன்…. இருந்தாலும் சம்டைம்ஸ் ஆபீஸ்ல இருந்து லேட் நைட்லாம் கேப்ல வரும்போது கொஞ்சம் பயமாதான் இருக்கும்.... பெரிய இவளாட்டம் ஆட்டோ ட்ரைவர்ஸ் கிட்டலாம் தகராறு பண்ணிட்டோம்... கராத்தே கூட கத்துக்கல.... இதெல்லாம் எனக்கு தேவையான்னு தோணும்...  அப்பறம் கொஞ்ச மாசத்துலயே வேற வீட்டுக்கு மாறி போய்ட்டோம்.... கல்யாணம் ஆகி நானும் வேற ஏரியாக்கே வந்துட்டேன்.... ஸ்டில் என்னோட பேரன்ட்ஸ் அங்க இருக்கறதால அந்த ஏரியாக்கு போவேன் .... அந்த மார்க்கெட்க்கு போவேன் ஆனா ஒரு தடவை கூட ஆட்டோ ஏறலை.....

இப்போ கொஞ்ச நாள் முன்னாடி அந்த ரோட்ல ஏதோ வேலையா போயிட்டு வீட்டுக்கு திரும்ப ஆட்டோ தேடினேன்.... தெளிவா அந்த ஸ்டாண்ட்ல இருந்து ரொம்ம்ம்ப தள்ளி ஒரு போக்கு ஆட்டோவை  நிறுத்தி கேட்டேன் ... ஆனா அவனை எங்கயோ பாத்த மாதிரியே இருந்தது ... அவனும் ஒரு மாதிரி என்னை பார்த்துட்டே யோசிச்சிகிட்டே சரி ஏறுங்கனான்.... ஏறி உக்காந்து மண்டைய பிச்சிகிட்டு யோசிச்சப்ப தான் தெரிஞ்சுது அது அப்போ நான் சண்டை போட்ட பதினஞ்சு வயசு ட்ரைவர்ன்னு.... இத்தனை வருஷத்துல வளர்ந்துருந்தான்.... அதான் ச்சட்ன்னு ஸ்ட்ரைக் ஆகல..... அய்யோஓஒ ன்னு நினைச்சுகிட்டே நிமிர்ந்து  பாக்கறேன் அவனும் ரியர் வ்யூ மிரர்ல ரொம்ம்ம்ம்ப தீவிரமா யோசிச்சிகிட்டே என்னை பாத்துட்டு இருந்தான்....  "அட ராமா... கடைசில இவன் ஆட்டோலயா ஏறிருக்கோம்.... அய்யோஓஒ இவன் ஸ்டாண்ட் ஆட்டோல கூட ஏற மாட்டோம்னு  நாம போட்ட சபதம் என்ன ஆறது (ம்ம்ம்கும்ம் இந்த அலப்பறைக்கு ஒண்ணுதான் குறைச்சல் ன்னு என் மைண்ட் வாய்ஸ் வேற இம்சை)....   இவனுக்கு நாம யாருன்னு தெரிஞ்சுட்டா அவ்ளோதான்....ஏதாவது வேணும்னே தகராறு பண்ணுவானே.... இவ்ளோ லேட்டா வேற போறோம்...  இது என்ன சோதனை.... " ன்னு வேகமா யோசிச்சிகிட்டே என்னோட ஹேண்ட்பேகை துழாவினேன்.... "ஆஹாஆஆ.... கிடைச்சுடுச்சு..... இதை வெச்சு தப்பிச்சுக்கலாம்" ன்னு உடனே அதை எடுத்து வெச்சிகிட்டேன் .... அப்பறம் கொஞ்ச நேரத்துல மெதுவா ரியர் வ்யூ மிர்ரரை பாத்தேனா.... அவன் ரோடை பாத்து ஓட்டிட்டு இருந்தான்.....

அது சரி அப்படி என்ன வெச்சுக்கிட்டேன்னு கேக்கறீங்களா.... ஒன்னும் இல்ல எப்பவோ அவசரத்துக்கு வாங்கின "ஷில்பா பொட்டு சைஸ் 1 " (இருக்கறதுலயே நெத்தி புல்லா அடைக்கற மாதிரி பெரிய சைஸ் பொட்டு) ஹாண்ட் பேக்ல இருந்ததா.... அதை எடுத்து கன்னத்துல ஒட்டிக்கிட்டேன் .... இப்போ என்னை அடையாளம் தெரியாதில்ல.... எப்புடிஇஇஇ ...

ஹிஹி.... ஏதோ சீரியஸா சொல்ல வந்தேன்னு நீங்க நினைச்சுருந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பேற்காது  !!!!

Saturday, March 11, 2017

பாட்டு பாடவா !!!

பாட்டு பாடறதுனா சும்மாவா .... அதுவும் பாட்டு பாடி ரெக்கார்டிங் பண்றதுன்னா ச்சும்மாவா ..... எட்டு வயசுல பாட்டு கிளாஸ் போக ஆரம்பிச்சது ... ஆரம்பிச்சது மட்டும் தான்...  ஒரு மூணு மாசத்துலயே  ஏன்டா போனோம்னு எப்படியோ சாக்கு போக்கு சொல்லி நிறுத்திட்டேன்.. ஏன்னா அது என் ப்ராப்ளம் இல்ல... பாம்பேல நாங்க இருந்த அபார்ட்மெண்ட்ல இருந்த கொஞ்சமே கொஞ்சம் மாமீஸ் ல பாட்டு தெரிஞ்ச ஒரு மாமிதான் சொல்லித் தந்தாங்க.... ஆனா பாருங்க "ஸா பா ஸா பா ஸா " ன்னு ஆரம்பிச்சவுடனேயே "பாரு மேல இருக்கற நவநீதா என்னமா பாடறா... க்ளாஸ்லயும் பர்ஸ்ட் ... பாட்டுலயும் கெட்டி படிப்புலயும் கெட்டி.. நீயும் இருக்கியே .... நல்லா இன்டரெஸ்ட் ஒட கத்துக்கணும்.... ஏனோ தானோன்னு கத்துக்க வந்தா இப்படிதான்" அப்படின்னு அவங்களுக்கு மேல் பிளாட்ல இருந்த என் க்ளாஸ்மேட்டை பத்தி சொல்லி சம்மந்தமே இல்லாம திட்டிட்டு இருப்பாங்க .... "மேம் நீங்க சொல்லிக் கொடுக்கவே ஆரம்பிக்கலையே... " அப்படின்னு சொல்லவா முடியும் (நவநீதா வேற எங்கயோ கத்துக்கிட்டா ).... கம்பேரிசனோட முழுழு பலனையும் அனுபவிச்சேன்... பாட்டு பாடணும்ன்னு ஆசை இருந்தாலும் அவங்க வீட்டுக்குள்ள நுழையவே பயம்... சோ அப்படியே நின்னு போச்சு ....

அதுக்கு அப்பறம் கேசட்டை போட்டு கேட்டு ஏதோ நானே கத்துகிட்டு பாடி அதை ரெக்கார்டு பண்ணி கேக்கறதுல ஒரு சந்தோஷம் .... அப்போ ஆரம்பிச்சது என்னோட ரெக்கார்டிங் பயணம்..... அதுவும் நடுவுல ஒரு வருஷம் வீட்ல பப்பின்னு ஒரு பொமரேனியனை வளர்த்தோம்.... நான் ரெக்கார்டு பண்ண வாயை திறந்தாலே கத்தும்.... நான் பாடகியா ஆகறதுல இப்படி பல பல தடைகள்.....

அப்பறம் பிளஸ் 1 படிக்கும்போது தான் வீட்டுக்கு ஒரு மாமி வந்து சொல்லித் தந்தாங்க .... ரெண்டு வருஷம் நல்லா கத்துக்கிட்டேன் .... ஆனா இப்போ வரைக்கும் கொலு, பண்டிகை , கல்யாணம், காதுகுத்து, பூணூல் , கோவில் ன்னு எந்த அகேஷனா இருந்தாலும் "குறை ஒன்றும் இல்லை " இல்லனா "ஸ்ரீ சக்ரராஜ " ன்னு இந்த ரெண்டு பாட்டு தான் பாடறது... அதுதானே யுனிவர்சல் சாங்ஸ் .... பாட்டு மாமிக்கு தெரிஞ்சா இதற்கு தானா நடையா நடந்து சொல்லித் தந்தேன்னு ரத்த கண்ணீர் வடிப்பாங்க ....

அப்பறம் பாட்டு கிளாஸ் போனேனோ இல்லயோ ரெக்கார்டிங் மட்டும் அந்த அந்த பீரியட்ல இருந்த டெக்னாலஜி,  ஐ மீன் டேப் ரெக்கார்டார்ல, லேப்டாப்ல, மொபைல்லன்னு பண்றதுல ஒரு குறைச்சலும் இல்ல...

சரி சினிமா பாட்டெல்லாம் முக்கியமா ராஜா சார் பாட்டெல்லாம் பாடி பாடி தரோ ஆய்டுச்சுன்னு எம்.எஸ் அம்மாவோட பாட்டெல்லாம் ஆன்லைன்ல கேட்டு கேட்டு கத்தி கிட்டு ஐ மீன் கத்துகிட்டு மொபைல்ல ரெக்கார்ட் பண்ண ஆரம்பிச்சேன் ... அப்போ தான் இந்த soundcloud ன்னு ஒண்ணு இருக்கறது தெரிய வந்தது .... அவ்ளோதான் குஷி பிச்சிகிச்சு... ஒரே இயர் போனை மாட்டிகிட்டு அதுல ரெக்கார்டிங்  ஆரம்பிச்சேன் ... இதுக்கு நடுவில கரோக்கே ன்னு ஒண்ணு இருக்கறது தெரிஞ்சவுடனே ஜானகி அம்மா மாதிரி இருக்கற என்னோட குரலோட இனிமைக்கு இனிமை சேர்க்கற மாதிரி கரோக்கே போட்டுக்கிட்டு இயர் போன்ல ஒரு சைட் மட்டும் இயர்ல போட்டுக்கிட்டு இன்னொரு சைடை மைக் கிட்ட வச்சிகிட்டு (என்கிட்ட இருக்கற லிமிடேட் ரெக்கார்டிங் facility யை கூட எவ்வளவு மூளையை கசக்கி எபக்டிவா யூஸ் பண்ணிருக்கேன் பாருங்க...) பாடி அப்லோடிங் தான் ..... ஆனா ஒண்ணு எல்லா ரெக்கார்டிங்கையும் நான் தனியா இருக்கும் போது தான் பண்ணுவேன் ...

அன்னைக்கு மட்டும் பாருங்க காதில் இயர் போனை மாட்டிக்கிட்டே கீரையை கிளீன் பண்ணி நறுக்கிட்டு இருந்தேன் .... ராஜா சாரோட "மௌனமான நேரம் ...." ஒட ஆரம்பிச்சவுடனே அஸ் யூஷுவல் ரிக்கார்டிங் ஆசை தலை தூக்கி, அதை அடக்க முடியாம அந்த பாட்டோட கரோக்கேவை  தேடி புடிச்சு அதோட சேர்ந்து பாடிட்டு (அப்படிதான் நினைச்சேன்) இருந்தேன்....

என் பொண்ணு எங்கிட்ட இருந்து கொஞ்ச தூரத்தில சோபாலயே தூங்க ட்ரை பண்ணிட்டு இருந்தா..... நான் பாடினதை  பார்த்திட்டு என் அருமை கணவரும் ஏதோ பாடறதா நினைச்சு ட்ரை பண்ணிருக்கார்.... அவர் பாட ஆரம்பிச்ச உடனே "அப்ப்பாஆ ப்ளீஸ்... எனக்கு தூக்கம் வருது..... பாடாதீங்க ...." அப்படின்னு கத்தினா.... அப்பவும் நான் டீசெண்டா  சிரிப்பை அடக்கிட்டு அமைதியா தான் வேலைய பண்ணிட்டு இருந்தேன் .....

உடனே அவர் "அப்போ நான் இயர் போனை மாட்டிட்டு பாடுவேன் " ....

அதுக்கு அவ "அய்யோஓஓஓ வேணாம் வேணாம் ..... அப்படியே வேணாலும் பாடிக்கோங்க "

ஹம்ம்ம்.... ஜானகி மாதிரி பீல் பண்ணி ஒரு பாட்டு ரெக்கார்ட் பண்ண முடியுதா ... எனக்கு எதிரிங்க வேற எங்கயும் இல்ல 😛 !!!

Note :
இதுல பாத்தீங்கனா ஒண்ணு கூட நம்ம ஊர் பேரு இல்ல ... நான் பாடின ஒண்ணு ரெண்டு டமில் பாடல்கள்ல என்ன புரிஞ்சு லைக் பண்றாங்கனே தெரில ... என்னே soundcloudடோட ரீச் ன்னு சொன்னா "இது ஒரு வேளை soundcloud ஆப் டெவலப்பர்ஸா இருக்கும் .... இப்படியாவது  நம்ம ஆப் யூஸ் ஆகுதேன்னு லைக் பண்ணிருப்பாங்க ..." அப்படிங்கறார் என் ஹஸ்பண்ட் 😛 !!!

Tuesday, March 7, 2017

நான் ஒரு பெண் !!!

கொஞ்சம் மாசங்களுக்கு முன்ன டெல்லி போய் இருந்தப்போ ....
நாங்கள் ஸ்டே பண்ணி இருந்த இடத்தில் இருந்து சாயங்காலம் "அக்ஷர்தாம்" போகறதுக்காக டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தோம்.... போகும் போது அவ்வளவு கூட்டமா இல்லை.... அக்ஷர்தாமில் இருந்து நைட் ஒரு எட்டரை மணிக்கு மேல் கிளம்பியபோது என்னவோ கொஞ்சம் துருக்க்ன்னு தான் இருந்தது.... இதுக்கும் கொஞ்சம் காலம் முன்னாடி வரைக்கும் வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ எட்டரை ஒன்பது மணிக்கெல்லாம் ஆபீஸ்ல இருந்து எந்த கவலையும் இல்லாம சென்னைல எலெக்ட்ரிக் ட்ரெயின்ல வீட்டுக்கு வருவேன்... ஆனால் அன்னைக்கு டெல்லில கூடவே கணவர் மாமனார் மாமியார் ன்னு எல்லாரும் இருந்தும் என்னவோ ஒரு டிஸ்கம்பர்ட்... என் பொண்ணை இறுக்கி கைய பிடிச்சிகிட்டே நடந்தேன்....

மெட்ரோ ஏறும் போது ஓரளவு தான் கூட்டமா இருந்தது.... டோர் கிட்ட இருக்கற சீட்ல (வயதானவர்கள் , நோயாளிகள் க்கு முன்னுரிமைன்னு நினைக்கறேன்....) நானும் என் பொண்ணும் உட்காந்துகிட்டோம்.... என் ஹஸ்பண்ட் எங்களுக்கு முன்னாடியே பாதுகாப்பா நின்னிட்டு இருந்தார்....  எங்க ரெண்டு பேராலயும் அந்த சின்ன கேப்ல ரொம்ப நேரம் உக்கார முடில... சோ அவ நல்ல உக்காந்துக்கட்டும்னு நான் எழுந்து  என் பொண்ணு பக்கத்துலயே நின்னுக்கிட்டேன்.... சில ஸ்டேஷன்ஸ் போனப்பறம் ஒரு வயசானவர் ட்ரெயின்ல ஏறினார்.... கொஞ்சம் மூச்சு திணறல் மாதிரி தெரிஞ்சார்..... அது வயதானவர்கள் சீட் னால என் பொண்ணை எழுப்பி அவளை என் பக்கத்துலயே கையை பிடிச்சிகிட்டே நின்னுட்டு இருந்தேன்.... கொஞ்ச நேரம் ஆனதும் என் பின்னாடி இருந்து யாரோ எங்களையே முக்கியமா என் பொண்ணையே கவனிக்கற மாதிரியே தோணிச்சு.... எதேச்சையா திரும்பற மாதிரி பின்னாடி பார்த்தேன்..... முகம் எல்லாம் ஏதோ தழும்போட தலையில துப்பட்டாவை போட்டு பாதி மறைச்சிகிட்ட முகத்தோட ஒரு பொண்ணு எங்களையே பார்த்துட்டு இருந்தா.... பகீர்ன்னு இருந்தது.... ஒரு நிமிஷத்துல பல விதமான எண்ணங்கள்.... என்னோட ஹேண்ட்பேகை பாக்கறாளா இல்லை என் பொண்ணை கவனிக்கறாளான்னு செக் பண்ண என் பேகை ஷோல்டர் மாத்தி மாட்டிகிட்டேன்…. அப்பொவும் அவ என் பொண்ணை தான் பாத்துட்டு இருந்தா.... அதுக்குள்ள வேற ஒருத்தர் எங்களுக்கும் அந்த லேடிக்கும் நடுவுல வந்தார்.... அவ அவரையும் மீறி என் பொண்ணு நின்னுட்டு இருந்த டைரக்ஷன்லயே பாத்துட்டு இருந்ததை பார்த்து அடி வயிறே கலங்கிடுச்சு.... மெதுவா பக்கத்துல இருந்த என் கணவர் கிட்ட சொன்னேன்.... அவரும் கொஞ்ச நேரம் அப்சர்வ் பண்ணிட்டு "ஆமா நானும் பார்த்துட்டு தான் இருக்கேன்.... அவ நம்மளை தான் பார்த்துட்டு இருக்கா.... பட் கவலைப்படாத..... பாத்துக்கலாம்...." அப்படினார்..... அதுக்கு அப்பறம் ஒரு பதினைந்து நிமிஷம் என்னோட ஹார்ட் பீட் எனக்கே கேக்கற அளவு ஒரு பதட்டம்.... அவ நோக்கம் என்ன.... டெல்லி மெட்ரோ பத்தி நியூஸ்ல வந்த அத்தனையும் அப்போதான் ஞாபகம் வருது.... என் பொண்ணை அந்த லேடி பாக்க முடியாத மாதிரி எனக்கு முன்னாடி இழுத்து இறுக்க அணைச்சிகிட்டே "சாய் ராம் சாய் ராம் " ன்னு  சொல்ல ஆரம்பிச்சேன்…. I was super alert  when the train stopped at every station…. Was constantly scanning if there was someone else somewhere with whom that lady might communicate…. திடீர்ன்னு வந்த அடுத்த ஸ்டேஷன்ல அந்த லேடி எங்களுக்கு முன்னாடி வந்து உக்காந்து இருந்த அந்த வயசானவரை கூட்டிட்டு ட்ரெயின்ல இருந்து இறங்கறா.... அவ அவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்த எங்க கேப்ல அந்த பெரியவரை தான் பார்த்துட்டு இருந்தான்னு அப்போதான் புரிஞ்சது.... may be she was his care taker or helper….

ஒரு நிமிஷம் அவளை என்னன்னவோ நினைச்சிட்டோமேன்னு கொஞ்சம் வெட்கமா இருந்தாலும்..... அது தான் இன்றைக்கு வெளில பெண்களுக்கு நடக்கற நிதர்சனங்கள்..... எதையுமே லைட்டா எடுத்துக்க முடியறது இல்லை பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு....

என்றைக்கு நம் வீட்டு குட்டி பெண் குழந்தைகள் எந்த வித கவலையும் பயமும் இல்லாமல் வீட்டு முற்றத்தில் விளையாட விடப்படுகிறார்களோ, ரோடில் சைக்கிள் ஓட்ட அனுமதிக்க படுகிறார்களோ….

என்றைக்கு ஸ்கூல் காலேஜ் ஆபீஸ் போகும் பெண்களின் பாதுகாப்பை  பற்றி எந்த கவலையும் இல்லாமல் பெற்றவர்களால் இருக்க முடிகிறதோ....

என்றைக்கு பெண்களுக்கு அவர்களின் இயற்கை உபாதைகளை தீர்க்க மறைவிடம் தேடி அலைவது நின்று ஒரு பேசிக் நீடாக வீட்டில் ஒரு ரெஸ்ட்ரூம் இருக்கோ....

என்றைக்கு பெண்களுக்கு அடிப்படை கல்வியாவது கட்டாயமாக கிடைக்குதோ  (I agree today women are in every possible field and doing wonders…. But I am talking about the women who do not get even basic education)....

என்றைக்கு morphing மண்ணாங்கட்டி என்று என்ன செய்து மிரட்ட பட்டாலும் "அது எதுவும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.... நீ செய்வதை செய்" என்று துணிச்சலாக சொல்லும் அளவிற்கு பெண்களுக்கு determination வருகிறதோ....

பெண்கள் தினம் அன்று மட்டும் திரும்ப திரும்ப "பெண் ஒரு மகள், தாய், சகோதரி, மனைவி etc etc " என்று ஒரே மெசேஜை சொல்லாமல்,…

When a woman, a girl child is seen, treated, felt and protected as a fellow HUMAN BEING, deserving all the rights to live SAFELY in this world,  Only then Women’s Day becomes meaningful because it should not be just the celebration of social, economic and cultural achievements of women but it should be a celebration of

The proud emotion ...

“I am a WOMAN” !!!

Friday, February 3, 2017

ராங் நம்பர்ங்க !!!

எங்க வீட்டு லேண்ட் லைன் போன் ஒரு ஆறு மாசமா வொர்க் ஆகல போல இருக்கு.... என்னது எங்க வீடு ஆனா 'போல இருக்கு' ங்கறேன்னு பாக்காதீங்க.... அந்த லேண்ட் லைன் போன் ச்சும்மா கிரஹாம்பெலோட கண்டுபிடிப்புக்கு ஒரு மானுமெண்டல் ப்ரூப்பா , வீட்ல வேற எங்கயுமே ஒரு பொட்டு தூசி இல்லேன்னா அப்போ தூசி தட்டப்படும் (அப்போ இந்த ஜென்மால அது எவ்வளவு கைவிட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே தூசி தட்டப்பட்டிருக்கும்) ஒரு வஸ்து .... மோடம் மட்டும் ஓவர் டைம் செய்யும் ஒரு போன் கனெக்ஷன் ....  அவ்வ்வளவேதான்...

ஆனா எவ்வளவு தடவை 'ராங் நம்பர்ங்க' ன்னு சொன்னாலும் வாரத்துக்கு ஒரு தடவை தவறாம 'ஹலோ .... துரை இருக்கானா' ன்னு ஓர்ர்ர்ர்ரெ ஒரு கால் மட்டும் வரும்... நானும் "ராங் நம்பர் " ன்னு சொல்லி வெறுத்து போய் ஒரு தடவை "இங்க ஜாக்சன் துரை இல்லங்கோ .... கட்டபொம்மன் தான் இருக்காருங்கோ " ன்னு கூட சொல்லிப் பார்த்துட்டேன்.... ம்ம்ம்ஹ்ம்ம் நோ யூஸ் ...

கொஞ்ச நாள் முன்னாடி அதிசயமா என் அம்மா, தங்கை எல்லாருமே என்னவோ லேண்ட் லைன்க்கு போன் பண்ணி பாத்திட்டு "என்னடி லேண்ட் லைன் வொர்க் ஆகலையா... " ன்னு கேட்டப்ப தான் "அந்த துரை" கால் ரொம்ம்ம்ப நாளா வரலைங்கறதே உறைச்சுது..... நானும் ரொம்ப மெனக்கெட்டு கனெக்ஷன் செக் பண்ணலை .... அதான் வீட்டுல நூறு மொபைல் போன் இருக்கே ....

இப்போ ஆசைக்காக ஒரு பழய மாடல் retro போன் வாங்கினவுடனே தான் அந்த லேண்ட் லைன் ஞாபகம் வந்து போனை ஆராய்ச்சி பண்ணேன்... போன்ல டிஸ்ப்ளேயே வரலை... அப்போ போன் தான் பால்ட்ன்னு முடிவு பண்ணி retro போனை கனெக்ட் பண்ணினேன்..... அதுவும் வரலை... "பாருங்க இது ஷோபீஸ் தான் போலருக்கு ... வொர்க் ஆகலை" ன்னு இவர்கிட்ட சொன்னா என்னை முறைச்சிட்டு பழய போனை செக் பண்ணார்.. பேட்டரியே இல்ல அதுல ... "இதுதான் நீ செக் பண்ண லக்ஷணமா" ங்கற மாதிரி என்னை லுக் விட்டார் .... "ஆமாப்பா ரொம்ம்ம்ப நாள் முன்னாடியே அந்த பேட்டரியை என்னோட டாக்கிங் பேர்ட்க்கு போடறதுக்கு நான் தான் எடுத்தேன் " அப்டின்னா பொண்ணு... "ரெண்டு போனும் வொர்க் ஆகலைனா லைன்லயே பால்ட்டா இருக்கும் .... அது புரியாம இதை ஷோ பீஸ்ங்கற " அப்டின்னு என்னோட இமேஜ டேமேஜ் ஆயிடுச்சேன்னு பீல் ஆயிட்டேன் ... ஓகே கம்மிங் டு தி பாயிண்ட் ....

அப்பறம் bsnl கம்ப்ளெயிண்ட் கொடுத்து ஒரே நாள்ல லைன் பால்ட்ட  கரெக்ட் பண்ணிட்டாங்க .... retro போனை கனெக்ட் பண்ணா டயல் டோன் வருது... இவருக்கு கால் பண்ணி "சூப்பரா வொர்க் ஆகுது " ன்னு சொன்னேன் .... "இரு நான் திருப்பி கால் பண்ணி இன்கம்மிங் செக் பண்ணறேன்" ன்னு சொன்னாருன்னு போனை வச்சேன்..... உடனே "ட்ரிங்க்க்க் ட்ரிங்க்க்க்க் " ன்னு உச்சஸ்தாயில அலறுது.... வேகமா எடுத்து "வொர்க்கிங் ..." ங்கறேன் ....

அந்த சைடுல இருந்து "ஹலோ..... துரை இருக்கானா " !!!

இந்த கதையை காமெடியா எழுதினாலும் , ஒரு மூணு வருஷமா இந்த நம்பரை அவங்க துரையோட நம்பர்ன்னு நினைச்சு கால் பண்ணிகிட்டே இருக்காங்களே... அப்போ மாறின தன்னோட போன் நம்பரை அந்த துரை அவங்களுக்கு இன்னமும் தரலைன்னு தானே அர்த்தம் .... "துரை இருக்கானா " அப்டின்னு மாத்தி மாத்தி கேக்கற அந்த வயதான குரல்களை நினைச்சா .........

Friday, January 27, 2017

எல்லா புகழும் இறைவனுக்கே !!

காலைல ஆறு மணிக்கு எழுந்து பக்கத்து வீட்டு ரூபா அதுக்கு முன்னாடியே எழுந்து அப்படி என்னதான் படிப்பான்னு யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, கஜானனம் சுலோகம் சொல்லி, நாலு சென்டிமீட்டரே இருந்த ஷாலினி கிராப்பை (உபயம் எங்கப்பா அண்ட் தெருமுனை சலூன்கார்ர்ர்) நூறு தடவை வாரி வாரி ஒரு ஸ்லைடை குத்தி, பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு பேபி ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) தலை ஆட்டி ஆட்டி சொல்லி, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது மூணாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... பர்ஸ்ட் ரேங்க் ஆமா...

காலைல ஆறு மணிக்கு எழுந்து கங்காபாய் மேம் சொல்லித்தந்த மராத்திய நினைச்சு கண்ணீர் விட்டுட்டே, அப்படி மராத்தி லெட்டர்ஸ்லயே தந்தி அடிக்கற நான் போய் மராத்தில கட்டுரையே எழுதணுமேன்னே யோசனை பண்ணிகிட்ட்ட்டே மெதுவா பல்லை தேய்ச்சு, குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, பத்து சென்டிமீட்டர் இருந்த முடியை நூறு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு வளர்ந்த ஷாலினி மாதிரி (நினைச்சுகிட்டு தான்) பின்னலை முன்னாடி பின்னாடின்னு மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு, விபூதியை நல்லா வெச்சிக்கிட்டு போய் எழுதினது அஞ்சாங்கிளாஸ் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா..... ஆனா பர்ஸ்ட் ரேங்க் இல்லை ஆமா... பின்ன மராத்தியே தெரியாதே அப்போ அதுல ஜஸ்ட் பாஸ் தான ஆக முடியும் (அப்போ ஹிந்தி மட்டும் தெரியுமா ... அதுல நூத்துக்கு நூறானெலாம் தயவு செஞ்சி கேட்டுடாதீங்க ... அதுலயும் ததிங்கிணத்தோம் தான் ஸ்டில் பெட்டர் தான் மராத்தி)

காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் மலையை பார்த்த மாதிரி உக்காந்து சிவபெருமானை தியானம் பண்ணிகிட்டே ஒரு அரை மணி நேரம் படிச்சிட்டு,  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, இருபது சென்டிமீட்டர் இருந்த முடியை நாலு தடவை வாரி ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "ம்ம்ம் படிச்சிடேன்ப்ப்பாஆ " ன்னு யாரை மாதிரியும் நினைச்சுக்காம என்னோட ஸ்டைல்லயே பவ்யமா சொல்லிட்டு, டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, போய் எழுதினது டென்த் எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... திஸ் டைம் சிவா ஆல்சோ ஹெல்ப்ட்....  சோ நல்ல மார்க் தான்...

காலைல ஆறு மணிக்கு எழுந்து எந்த யோசனையும் இல்லாம ஒழுங்கா பல்லை தேய்ச்சு, ஹார்லிக்ஸ் கப்பை எடுத்துக்கிட்டு மொட்டை மாடிக்கு புக்ஸோட போய் வானத்தை பார்த்து  உக்காந்து சூர்ய பகவானை தியானம் பண்ணிகிட்டே ஒரு மணி நேரம் படிச்சிட்டு,  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி, என்னோட நாப்பது கிலோ ஸ்கூல் பாவாடையும் அப்பாவோட பெரிரிரிய ஷர்ட்டையும்  போட்டுக்கிட்டு தெருமுனை பிள்ளையார் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போய் சுத்து சுத்துன்னு ஒரு முப்பது சுத்து சுத்திட்டு, முப்பது சென்டிமீட்டர் இருந்த முடியை ஒரு தடவை கூட சரியாய் வாராம ரெண்டு பின்னல் போட்டுக்கிட்டு , பருப்பு சாதம் (இது மட்டும் காலேஜ் ஹாஸ்டல் போற வரைக்கும் மாறலை) சாப்பிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்கற அப்பாகிட்ட "யெஸ்ஸ்ஸ்" ன்னு (கான்பிடன்ட்டா இருக்கேனாமாம் ... ) பெரிய்ய மனுஷியா சொல்லிட்டு,  டமால்ன்னு அப்பா அம்மா கால்ல விழுந்து அவங்க கைல விபூதி டப்பாவை தந்து வெச்சி விட சொல்லி, கூடவே கொஞ்சம் குங்குமமும் சேர்த்து வெச்சிக்கிட்டு போய் எழுதினது ப்ளஸ் டூ எக்ஸாம் .... அப்பப்பா பிள்ளையாரப்பா காப்பாத்திட்டார்பா... கூடவே ஆஞ்சி வேற ... சோ கேட்கணுமா...

நல்லா தான் போயிட்டு இருந்தது இது வரைக்கும்......
அப்பறம் தான் ....
....
மறுநாள் எக்ஸாம்க்கு முதல் நாள் புல்லா ஸ்டடி லீவ் இருந்தாலும் புக்கை பூஜைல வெச்சிட்டு, பகல்ல நல்லா தூங்கிட்டு , சாயங்காலம் இருந்த அரை அடி கூந்தலை (ஹோம் சிக்ல முடி எல்லாம் கொட்டி போச்சு) சும்மா கட்டிக்கிட்டு , அந்த டீ தண்ணிய (பின்ன காபி தண்ணின்னு சொல்லலாம்.... உண்மையாவே தண்ணியா இருக்கற ஹாஸ்டல் டீயை சொல்ல கூடாதா), குடிச்சிட்டு அங்க இருந்த ஆபத்பாந்தவன் பிள்ளையார் கோவிலுக்கு போய் ஒரு நாப்பது சுத்து சுத்திட்டு, திரும்ப ஹாஸ்டல் வந்து, மறக்காம அங்க வந்து பொறி விக்கறவர் கிட்ட கார பொறி வாங்கி சாப்பிட்டு (இந்த ரண களத்துலயும் உனக்கு கார பொறி கேக்குதான்னு மட்டும் தெரியாம கேட்டுடாதீங்க .... அது சென்டிமென்ட .. பொறி சாப்டா அடுத்த நாள் எக்ஸாம் சும்மா பொறி பறக்க வெளுக்கற அளவு ஈஸியா வரும்னு .... it was a proven fact in those 4 years), அப்பறமும் திருந்தாம டின்னரையும் சாப்பிட்டு அலப்பறை விட்டுட்டு காரிடார்ல சுத்திட்டு, ராத்திரி புல்லா காலைல 5 மணி வரைக்கும் படி படின்னு அந்த புக்கை வெச்சி செஞ்சிட்டு,  காலைல ஆறு மணிக்கு இல்ல எட்டு மணிக்கு எழுந்து சுத்தமா படிச்ச மாதிரியே இல்லாம மண்டையெல்லாம் ஒரே பிளாங்க்கா, முழிச்சிகிட்டே பல்லை தேய்ச்சு (ஆனாலும் கூலா கெத்து மெயின்டெயின் பண்ணுவேன் இல்ல ),  குளிச்சு, அதே கஜானனம் சுலோகம் சொல்லி ப்ளஸ் ஒரு நாலு a4 ஷீட்ல எழுதி வெச்சிருக்கற எல்லா ஸ்லோகத்தையும் சொல்லி, தலை வாருவது எல்லாம் ஒரு வேலையான்னு அதை குழாயடி சண்டைக்கு போறவ மாதிரியே அள்ளி முடிஞ்சிகிட்டு, "படிச்சிட்டியா..." ன்னு கேக்க ஹாஸ்டல்ல அப்பா இருப்பாரா என்ன... சோ நானே வரிசையா பிள்ளையார் கோவில் விபூதி, பாபா விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் செந்தூரம் (இதையெல்லாம் கரெக்ட்டா கலெக்ட் பண்ணி வெச்சிருப்பேன்.... பிரெண்ட்ஸ்க்கும் சாமியாடி ரேஞ்சுக்கு நானே மந்திரிச்சு வெச்சு விடுவேன்) எல்லாத்தையும் வெச்சிக்கிட்டு மேல்மருவத்தூர் ச்ச டங் ஸ்லிப் எக்ஸாம் ஹாலுக்கு போய் எழுதினது எஞ்சினீரிங் எக்ஸாம் .... அப்பப்பா இவ்வளவு பேர் இருந்தாங்கல... சோ எப்படியோ காப்பாத்திட்டாங்க...

இப்படியாக ஒரு வழியா எக்ஸாம்ஸ்க்கு ஒரு பெரிய முழுக்கை போட்டு படிப்பை முடிச்சிட்டேன் (வேணும்னா மேல படிக்கலாம்.... பட் இந்த கதையை படிச்ச உங்களுக்கே புரிஞ்சுருக்குமே )...

இப்போ போன மாசம் முதல் ஹிந்தி எக்ஸாம் (ஸ்கூல்ல ஆறாவது வரைக்கும் நோ எக்ஸாம்ஸ்... நல்லா இருக்குல்ல ).... சோ "    I am soooo excited maa… this is my first exam…” அப்படினெல்லாம் சொல்லிட்டு, என்னை மாதிரி இருக்க மாட்டா கொஞ்சம் சீரியஸா தான் இருக்கான்னு நினைக்கற மாதிரி நைட் படிச்சிட்டு தூங்கிட்டு, காலைல ஏழு மணிக்கு எழுந்து , மெதுவ்வ்வ்வா ஏதோ யோசனை பண்ணிகிட்டே (சேம் ப்ளட்) பல்லை தேய்ச்சி, குளிச்சு, டிரஸ் போட்டுக்கிட்டு , நேரா புக் ஷெல்ப் திறந்து தேடிடி ஒரு அமர் சித்ர கதா புக் (மஹாபாரதம்) எடுத்து மெனக்கெட்டு ஏதோ பேஜை திறந்து அதை படிக்க ஆரம்பிச்சா... "ஹே சுலோகம் (because that is the most important part of exams you see) ஏதாவது சொல்லுடி..." ன்னு நான் சொன்னதுக்காக இருந்த இடத்துலயே வேகவேகமா என்ன சொன்னான்னே புரியாம ஏதோ ஒண்ண சொல்லிட்டு "சொல்லிட்டேன்மா..." ன்னு மறுபடியும் மஹாபாரதம் படிக்க ஆரம்பிச்சாளே பாக்கணும் .... நானே ஷாக் ஆய்ட்டேன்னா பாத்துகோங்களேன் ...

பின் குறிப்பு:
இதெல்லாம் கூட பரவால்ல .... ஆனா வீட்ல ஒருத்தர் ஆபீஸ் போயிட்டு வந்து மறுநாள் எக்ஸாம்க்கு நைட், கொட்டாவி விட்டுக்கிட்டே, இந்த கண் இமையெல்லாம் குச்சி வெச்சு ஓபன் பண்ணிக்கிட்டு தெய்வமேங்கற மாதிரியே பாவமா  படிக்க ஆரம்பிக்கறப்போ.... இந்த பக்கம் என் பொண்ணு ஏதோ கதை புக்கும், அந்த பக்கம் நான் "மங்கையர் மலரும்" படிப்போமே... இந்த அக்கிரமத்தை கேக்க யாருமே இல்லையாங்கற மாதிரியே எங்க ரெண்டு பேரையும் பாக்காதீங்க... அவருகிட்ட எல்லா ஸ்லோகமும் இருக்கற a4 ஷீட்டை கொடுத்துட்டேன்.... எல்லா புகழும் இறைவனுக்கே !!