Friday, October 7, 2016

வாட் அ நவராத்திரி தட் வாஸ் !!

எனக்கு நினைவு தெரிந்த நவராத்திரிகளில் "எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் மாமி ... வெத்தலை பாக்கு வாங்கிக்க வாங்கோ ..." அப்படின்னு குங்கும சிமிழை நீட்டி சிமிழ் மாதிரி இருக்கற குட்டி வாயால கூப்பிடும் குழந்தைகள் (ஆனா அப்போ மட்டும் அதுகளுக்கு நீளமா தலை முடி இருக்கும் எல்லாம் சவுரி உபயம் .... அதுல ராக்கொடிய வச்சு தாழம்பூ தெச்சுன்னு பண்றதுக்கு அதுகளுக்கு ரசனையான பாட்டிகள் இருப்பாங்க ...)

"அடடே குழந்தை என்ன சமத்தா கூப்பிடறது ..." அப்படின்னு மெச்சிக்கிட்டே "மாலுக்குட்டி எங்க அழகா ஒரு பாட்டு பாடேன் " தவறாம சொல்லும் மாமிகள் (அங்க கூடத்துலே பார்த்தா பெருசா விரிச்சு இருக்கும் ஜமக்காளம் மேல ஆல்ரெடி ஜுகல்பந்தி பண்ண தோதா 7 8 பாவாடை சட்டை சவுரிகள் பலமா கச்சேரியை ஆரம்பிச்சிருக்கும் )...

அத்தனை டிக்கட்டும் வெட்கப்படாம சுருதி சுத்தமா (?!!!) பாடறதையும் பொறுமையா கேட்கும் மாமி வீட்டு மாமாக்கள் , தாத்தாக்கள்...

கொலு கடைசீ படிக்கட்டுல வெச்சிருக்கற குட்டியூண்டு பீங்கான் டீ கப் செட் , மர சோப்பு (அதோட காலி ஒலை பெட்டியும் தவறாம அது பக்கத்துலயே இருக்கும்) , மாக்கல் செட் (அதுல மாத்திரை சைஸ்ல பணியாரம்  செய்ய இருக்கும் பணியார தட்டு, இட்டிலி செய்ய காலி மாத்திரை ஸ்ட்ரிப் தவறாம இருக்கும்) , துக்கினியூண்டு பிரிட்ஜ், பீரோ, ஆங் மிக்ஸி (பிளாஸ்டிக்ல ) இது எல்லாத்தையும் நைஸா போய் போய் தொட்டு பார்க்கும் பாவாடை அக்காக்களோட வந்த வாண்டு நிஜார்கள் பிராக் பாப்பாக்கள் ....

இது எல்லாத்தயும் விட கொடுக்கும் தாம்பூலத்துல  வெத்தலை பாக்கு பழம் இதோட ஒரு பேப்பர் பொட்டலம்... அந்த பொட்டலத்துல இருக்கும் சுண்டலை  ஆசை ஆசையாக, பொட்டுக்கடலை மாவை பப் பப் ன்னு அள்ளி சாப்பிடும் குழந்தைகள் ....

வாட் அ நவராத்திரி தட் வாஸ் .... I want a time machine please !!!

No comments:

Post a Comment