Wednesday, September 21, 2016

தன்னம்பிக்கை மனிதர்கள் !

ஒன்பது வயசு இருக்கும் போது நாலு வீடுகள் இருந்த ஒரு காம்பௌண்ட்ல குடி இருந்தோம்... எங்க வீடு மெயின் ... பின்னாடி வரிசையா வேற முணு போர்ஷன்... நான் , பின்னாடி முதல் வீட்டு அபி, ரெண்டாவது வீட்டு மஞ்சு முணு பேரும் தான் ஸ்கூல் போற நேரம் தவிர எப்பவும் ஒண்ணா விளையாடிட்டு  இருப்போம் .... விளையாட்டு னா இந்த ஓடி பிடிச்சி , கண்ணாமூச்சி, செங்கல் அடுப்பு வச்சு சமைக்கறோம் பேர்வழின்னு துவரம் பருப்புக்கு பதிலா கடலை பருப்பை வேகவைக்க படாதபாடு பட்ட சமையல் விளையாட்டு , பிசினெஸ் , கேரம் இதெல்லாம் மட்டும் இல்ல... எங்க காம்பௌண்ட் உள்ள இருந்த கொய்யா மரத்தில ஏறுறது , அதுல இருந்து சன்ஷேட்க்கு தாவறது , மாடிப்படி சுவர்ல சறுக்கறதுன்னு பல வீர விளையாட்டுகளும் அடக்கம்...... பல நாள் இந்த மாதிரி விளையாட்டுல அடிபட்டுருமோங்கற பயத்துல அம்மா கையால தான் அடிபட்டுக்கிட்டு இருக்கேன் .... கடைசீ போர்ஷன் ஹரி அண்ணா மட்டும் நாங்க விளையாடுற இந்த வீர விளையாட்டை எல்லாம் சிரிச்சிகிட்டே வேடிக்கை பார்த்திட்டு இருப்பான்...
ரொம்ப சாதுவா அமைதியா அதே சமயம் ரொம்ப disciplined ஆ இருக்கற பையன் ... அவன் அம்மா ஒரு டீச்சரா இருந்ததும் காரணமா இருக்கலாம்... காலைல அஞ்சு மணிக்கே  எழுந்துருவான்.... ஆறாங் கிளாஸ் படிக்கும் போது அவ்வளவு சீக்கிரமா  எழுந்து தினமும் என்னதான் படிப்பானோ .... ஆனா படிப்புல மட்டும் இல்லாம பயங்கர ஜெனரல் நாலேஜ் ... அவன் நோட் எல்லாம் அவ்வளவு கிளீனா  இருக்கும் ... கையெழுத்து கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கும் ... அவ்வளவு கிராஃப்ட் வொர்க் பண்ணுவான்.. நாலாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்த எனக்கு ஹரி அண்ணா அப்படினாலே ஒரு மரியாதை..... ஆனால் அவனை பார்த்து அபிக்கு எப்பவும் பொறாமை.... "அவனே அப்படி படிக்கறான்.... உனக்கென்ன நல்லாதானே இருக்க... அப்பறம் என்ன ..." ன்னு அவனை கம்பேர் பண்ணி அவ அம்மா அவளை எப்பவும் திட்டறதும் காரணமா இருக்கலாம்....

இப்படி இருக்க ஒரு நாள் அபி ஒரு பக்கம் உசுப்பேத்த (அவ தெளிவு.. ஏற மாட்டா என்னை ஏத்தி விட்டு நான் அடிவாங்கும் போது ஓடிருவா ) நான் நல்லா வழுக்கற  கொய்யா மரத்தில எப்படியோ ஏறிட்டேன்... சன் ஷேட் உயரத்துக்கு போயிட்டேன் .... அப்போ வெளிய இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்த ஹரி அண்ணா "ஹேய் கீழ விழுந்துற போற .. ஏன் இப்படி ஆபத்தான விளையாட்டு எல்லாம் விளையாடறீங்க  " அப்படினான்... உடனே அபி வெடுக்குன்னு "ஏன் உன்னால இது எல்லாம் செய்ய முடிலயேன்னு பொறாமையா.."  அப்படின்னு கேட்டா .... அப்படி கேட்ட உடனே ஹரி அண்ணா முகம் அப்படியே சுண்டி போச்சு ... நான் அதுவரைக்கும் அவனை அப்படி பார்த்ததில்லை..  ஆனா ஒரு நிமிஷம் தான் .. அதுக்குள்ள டக்குனு மெல்லிசா ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போய்ட்டான்...
ஒண்ணும் சொல்லாம போன அவனை பார்த்து எனக்கே ரொம்ப கஷ்டமா போச்சு .... "ஏன் அபி இப்படி பேசற .. இப்படி பேசறது தப்பு இல்லயா ..." அப்படின்னு கேட்ட என்னை "அட போப்பா அவனுக்கு தான் ரொம்ப இன்டெலிஜெண்ட்ன்னு ப்ரவுட்... அவனால நான் எவ்வளவு திட்டு வாங்கறேன் தெரியுமா " ன்னு சொன்னா ...
அந்த வருஷம் நவராத்திரி வந்தது... ஹரி அண்ணா வீட்ல  எப்பவுமே பெருசா கொலு வெப்பாங்க... அந்த வருஷமும் பெருசா வெச்சிருந்தாங்க... டீச்சர் "இந்த வருஷம் எங்காத்து ஹரி ஸ்பெஷலா ஒரு தனி கொலு வெச்சிருக்கான் .... நீங்க வந்து பாருங்க..." அப்படின்னு சொன்ன உடனே ஆர்வத்துல போனோம் ... அடேங்கப்பா ஒரு மலை அதுக்கு கீழ காடு அனிமல்ஸ் குளம் அப்பறம் பேனால பவுண்டன் ரெயில்வே ட்ராக் pulley மாறி ஏதோ எல்லாம் வெச்சிருந்தான்..
எங்கயோ ஒரு பைப்பை ஓபன் பண்ணினா பேனா பவுண்டன்ல இருந்து தண்ணி வருது.... அப்பறம் கீ கொடுத்தா டிரெயின் ஒடி வருது... அதுல மனுஷன் மாறி ஒரு பொம்மை டிரெயின் எஞ்சின்ல அதை ஓட்டற டிரைவர் மாறி உட்காந்து வருது .... ரொம்ப யோசிச்சு ஏதோ பண்ணி இருந்தான் .... அடுத்த கொலுவுல ஏரோபிளேன் ஹெலிகாப்டர் லாம் பண்ண போறேன்னு சொல்லிட்டு அபியை பாத்து பெருமையா ஒரு சிரிப்பு  சிரிச்சான் ... அவளுக்கு முகமே சரி இல்ல... அப்ப தான் நான் அந்த பொம்மைய கவனிச்சேன்... அதுக்கு ஒரு கையை காணோம்.... எனக்கு ஹரி அண்ணாவோட அந்த confidence பிடிச்சி இருந்தது .... ஆமா அவனுக்கு போலியோனால வலது கை ரொம்ப குட்டியா இருக்கும் ...

தன்னம்பிக்கை மனிதர்கள் !!!!

2 comments:

  1. Charu, really fantastic writing skill, you have.

    You should start writing humour stories n publish.

    You will be damn successful.

    ReplyDelete