Saturday, September 17, 2016

அப்படி என்ன இடம்...

மாமாவிற்கு கல்யாணம் ஆகி கொஞ்ச நாளே ஆகி இருந்தது .... லீவுக்கு மாமா வீட்டில் .... அன்னைக்கு காலைல எழுந்த உடனே அம்மா சொன்னது "அத்தையோட பாமிலி பிரெண்ட் ஒரு மாமி .... நீ கூட கல்யாணத்துல பாத்தியே ... அவங்க வீட்டுக்கு நம்ம எல்லாரையும் கூப்பிட்டு இருக்காங்க .... மாமாக்கு ஆபிஸ் ... அதனால அத்தை சித்தி பாட்டி நாம மட்டும் அவங்க வீட்டுக்கு இன்னைக்கு போறோம் ... அது கொஞ்சம் தூரம் ரெண்டு பஸ் மாறி போகணும்... அதுவும் இல்லாம முக்கியமா சாயங்காலம் 5 மணிக்குள்ள அங்க இருந்து ரிட்டர்ன் ஆய்டணுமாம் .... இருட்டினா safe இல்லயாம்.. அதனால ஒழுங்கா சீக்கிரம் கிளம்பணும் ... சரியா "... உடனே ஒரே ஆர்வம் ..... அப்படி என்ன இடம் .... கூடவே ஒரு பயம் ... 5 மணிக்கு மேல லேட் ஆச்சுன்னா என்ன பண்றதுன்னு...

மத்தியானம் கிளம்பினோம்... முதல்ல ஒரு பஸ்ல ஏறி ஏதோ இடத்துக்கு போனோம் ... அந்த இடம் அந்த ஊர்ல நான் பாத்த மத்த இடங்கள் மாறித்தான் இருந்தது .... இன்னொரு வண்டில (பஸ்ஸா ஆட்டோவா ன்னு சரியா ஞாபகம் இல்ல) ஏறினோம்..... கொஞ்ச நேரத்துல பாத்தா  ரோட்க்கு ரெண்டு பக்கமும் பச்ச பசேல்ன்னு ஏதோ கிராமம் மாறி வருது.... கொஞ்ச தூரத்தில செம்மண் ... அப்பறம் பாத்தா அழகா வரிசையா தனி தனி கம்பௌண்ட் வெச்ச வீடுகள் .... ஒவ்வொரு வீட்டிலும் மரங்கள்..... வீட்டுக்கு முன்னாடி கோலம்.... ஏதோ அழகான காலனி மாறி இருக்கு....  ஆன போற வழில ஆள் நடமாட்டம் அவ்வளவா இல்ல... எல்லாரும் மத்தியானம் வீட்ல இல்ல இருப்பாங்கன்னு அப்போ புரில...அவங்க வீட்டுக்கு போனப்போ 4 மணி ஆய்டுச்சு .. போன உடனே லெமன் சேவை , தேங்காய் சேவை ..... நல்லா சாப்பிட்டு ஆன்னு பராக்கு பாத்திட்டு கிளம்பலாமான்னு கேட்ட உடனே சட்டுனு அவங்க வீட்டு கடிகாரத்தை பாக்கறேன்... ஆஆ மணி 5.15 ..... அவ்வளவுதான் அய்யயோ 5 மணிக்கு மேல ஆச்சுனா safe இல்லயே... வர்ற வழில எல்லாம் யாருமே இல்லயே... இப்படி பயந்துகிட்டே திரும்பி வர்ற வழியெல்லாம் யோசிச்சிகிட்டே வரேன் ... ஆனா அப்ப கூட அந்த சாயங்கால நேரத்துல அந்த காத்து, அந்த வயல்வெளி அழகை எல்லாம் ரசிக்கணும்னு தோணுது பட் சீக்கிரம் வீட்டுக்கு போய் சேரணுமேன்னு ஒரே கவலை (எனக்கு தான்)... எப்படியோ படக்படக்ன்னு அடிச்சிக்கற நெஞ்சோட ஒரு வழியா 7 மணிக்கு வீட்டுக்கு வந்து சேர்ந்தாச்சு....

ஆனா ஒண்ணு ஒரே ஒரு தடவை பார்த்த அந்த இடமும், அந்த வீடுகளும் 27 வருஷங்கள் கழிச்சும் மனச விட்டு போகவே இல்ல (பாருங்க சாப்பிட்ட சேவை வரைக்கும் ஞாபகம் இருக்கு)... இப்போ திரும்பவும் அங்கயே போனாலும் அதை எல்லாம் கண்டு பிடிக்க முடியுமா இல்ல அது எல்லாம் இருக்குமான்னே தெரில .... அப்படி என்ன இடம்னா கேக்கறீங்க...  

இடம்: தாம்பரம்
வருடம்: 1989
கிளம்பிய  இடம் : மாம்பலம்

No comments:

Post a Comment