Friday, August 12, 2016

மறக்க முடியாதவை

என்னோட ஸ்கூல்ல மணின்னு ஒரு பையன் படிச்சான்.... ரொம்ப சாந்தமான, ஒரளவு நல்லா படிக்கற, நாலு வருஷம் ஒரே ஸ்கூல் யுனிபார்மை கிழியாம போட்டுக்கிட்டு, மத்தவங்க கொண்டு வர்ற டிசைன் டிசைனான பேகுகளை கண்ணில ஏக்கத்தோடு பார்த்துட்டே தோளில் ஜோல்னா பையோட வரும் ஒரு குருக்களோட பையன் ... எப்பவும் அவன் வீட்டிலிருந்து 25 நிமிஷம் நடந்தே ஸ்கூலுக்கு வர்றவன் எப்போவாவது அவன் அப்பா எதாவது வைதீக விஷயங்களுக்காக ஸ்கூல் இருக்கும் ஏரியா பக்கம் வந்தார்னா அவர் கூட சைக்கிள் ரிக்ஷால வந்து இறங்குவான்..... அப்போல்லாம் ஸ்கூலுக்கு நிறைய பேர் ஆட்டோல வருவாங்க... அவங்களை எல்லாம் பாத்து மணிக்கும் ஒரு நாளாவது ஆட்டோல ஸ்கூலுக்கு வரணும்னு அவ்வளவு ஆசை .... "எங்க அப்பா எப்பவும் ரிக்ஷால  தான் வருவார் .... ஆட்டோன்னு கேட்டா சார்ஜ் அதிகம் அதுவும் இல்லாம ரிக்ஷாகாராளாம் பாவம் டா ... சவாரியை நம்பித்தானே அவா இருக்கா ... நாம அதுல போலைனா பாவம் தானே அப்படீன்னு சொல்லுவாருடா " என்பான்... ஆமாம் அவன் அப்பாவை பாத்தாலே யாருக்கும் ரொம்ப பிடித்து விடும் ... எப்பவும் சிரிச்ச முகம் ... அந்த ரிக்ஷா ஓட்டுபவரை கூட அவ்வளவு மரியாதையாய் நடத்துவார்... ஒரு நாள் மணி ஸ்கூலுக்கு வரலை... அசெம்பிளில ஒரு அனௌன்ஸ்மாண்ட் "நம்ம ஸ்கூல்ல செவன்த் c ல படிக்கும் மணியின் தந்தை நேற்று இரவு இறந்து விட்டார் ... அவருக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்" அப்படின்னு ... பயங்கரமா ஷாக் ஆயிட்டோம்.. அவரை அதற்கு முன்னாடி நாள் தான் பார்த்தோம்.. அதிசயமா ஆட்டோல வந்து மணியை இறக்கிவிட்டார்... அப்ப கூட நல்லாதான்  இருந்தார்.. நாங்க எல்லாம் கூட ரொம்ப சந்தோஷமா இருந்த மணியை கேட்டோம் "என்னடா ஆட்டோல ஸ்கூலுக்கு வரணும்ங்கற உன் நீண்ட நாள் ஆசை நிறைவேறிடுச்சா" ன்னு .... "ஆமாடா என்னவோ இன்னைக்கு அப்பா ரொம்ப நாளா கேட்டுண்டே இருக்கியேடா வா ஆட்டோல ஸ்கூல்ல விடறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தார் டா..." எனறான்... எங்க கிளாஸ்ல எல்லாரும் மணி வீட்டுக்கு போனோம்... அவன் அம்மா , அக்கா, தம்பி இவங்களை எல்லாம் கண்கொண்டு பார்க்கவே முடியல.. "என்னடா எப்படிடா ஆச்சு" ன்னு பசங்க கேட்டாங்க... "நேத்து காலைல என்னை ஸ்கூல்ல இறக்கி விட்டப்போ ஆட்டோ கம்பில தலையை சைடுல நல்லா இடிச்சுக்கிட்டார்.. அப்பறம் ஒண்ணும் வலி இல்லைன்னு டாக்டர் கிட்ட எல்லாம் போல ... நைட் திடீர்ன்னு காதுல பிளட் வந்தது....  ஒரு மாறி தலை எல்லாம் சுத்துதுன்னு  சொல்லிட்டே கீழ விழுந்து இறந்துட்டாருடா " ன்னு கதறி கொண்டு சொன்ன அவனை பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருந்தது ... அதற்கு அப்பறம் ஆட்டோவில் போவது அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விஷயமாக இருந்து இருக்குமா என்று இன்று வரைக்கும் என் மனசுல ஒரு கேள்வி இருக்கு !!!

2 comments:

  1. இப்போது வலி எங்களுக்குள்...
    ஏதோ ஒன்று உள்மனதில் அவருக்கு
    அதில் ஏறினால் ஆபத்து என
    இருந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது
    சொல்லிச் சென்றவிதம் அருமை

    ReplyDelete
  2. மிக்க நன்றி Sir !

    ReplyDelete